திரைப்படத் துறையில் மட்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல என்றும், எல்லாத் துறைகளிலுமே பாதுகாப்பின்மை நிலவுவதாகவும் சொல்கிறார் நடிகை நித்யா மேனன்.
தமது தனிப்பட்ட வாழ்க்கையில் தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு இதுவரை ஏற்பட்டதில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயற்சி செய்தனர். ஆனால் நான் விட்டுக்கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று அவர்களிடம் கடுமையாக கூறினேன்.
“என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தலையிடுவார்கள்,” என்கிறார் நித்யா மேனன்.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒரு பெண் தாம் எடுத்துள்ள முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
“தைரியமாக இருந்தாலே பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். இதை மறந்துவிடக் கூடாது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை நான் மறக்கவில்லை,’’ என நித்யா மேனன் மேலும் கூறியுள்ளார்.