தற்போது யோகிபாபு காட்டில்தான் வாய்ப்பு மழை பெய்து கொண்டிருக்கிறது. சுமார் ஒரு டஜன் படங்களில் நடித்து வருபவர் மேலும் 10 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் அவர் இப்போது நடித்துவரும் ‘50/50’ படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் காதல் குறும்புகளைச் செய்யும் ரவுடியாக நடிக்கிறாராம்.
இப்படத்தில் யோகிபாபுவுடன் சேதுவும் இணைந்து நகைச்சுவை செய்கிறார். மேலும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜான் விஜய், தீனா, பாலசரவணன், மயில்சாமி, சுவாமி நாதன், மதன்பாபு என பெரிய நகைச்சுவைப் பட்டாளமே களம் இறங்கியுள்ளது.
அலெக்சாண்டர் எழுதிய கதையை கிருஷ்ணா சாயி இயக்குகிறார். இது அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படமாக உருவாகி உள்ளதாம்.
“இது ஒரு திகில் கதை. அதில் நகைச்சுவையைக் கூடுதலாகச் சேர்த்து ஜாலியான படமாக்கி உள்ளோம். ‘ரொமான்டிக் ரவுடி’யாக வரும் யோகிபாபு வழக்கம்போல் அசத்துவார்.
“படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. அவற்றுள் யோகிபாபு பாடி ஆடும் ‘கோலமாவு கோகிலா’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும். இப்பாடலை ‘சூப்பர் சிங்கர்’ பிரபலம் பூவையார் பாடியுள்ளார். இந்தப் படம் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக அமையும் என்கிறார் இயக்குநர் கிருஷ்ணா சாயி.
இந்தப் படம் விரைவில் வெளியீடு காண உள்ள நிலையில் மேலும் 3 புதிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறாராம் யோகிபாபு.
இந்நிலையில் இவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ள குடும்பத்தார் பெண் தேடும் படலத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்.
அநேகமாக ரஜினி தலைமையில்தான் யோகியின் திருமணம் நடைபெறும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
“தலைவரே (ரஜினி) எப்போது திருமணம் யோகி? என்று கேட்டு விட்டார். எனவே இனியும் தாமதிக்க வேண்டாம். சீக்கிரமே திருமணத் துக்கு ஏற்பாடு செய்யுங்கள்,” என்று யோகியும் கூறிவிட்டாராம்.
கொசுறு: தினசரி கால்ஷீட் அடிப்படையில்தான் சம்பளம் பெறுகிறார் யோகி. நாயகனாக நடிக்கும் படங்களுக்கும் கூட இந்த அடிப்படையில்தான் அவர் சம்பளம் வாங்குவதாகத் தகவல்.