போலிசாரிடம் 'சிக்கிய' ஸ்‌ரேயா

போலிசாரிடம் 'சிக்கிய' ஸ்‌ரேயா

2 mins read
4384f104-0adf-4400-a04d-41aef77bcca1
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்‌ரேயா நடிக்கும் படம் 'சண்டக்காரி'. இந்தப் படம் பெரியளவில் வெற்றி பெறும் என்று நம்புகிறாராம். அதன் பிறகு தமிழில் மீண்டும் வெற்றி வலம் வருவேன் என்றும்  அவர் சொல்கிறார். படம்: ஊடகம் -

லண்டன் போலிசாரிடம் சிக்கிக் கொண்டார் நடிகை ஸ்ரேயா, நடிகை ஸ்ரேயாவிடம் போலிசார் பல மணி நேரம் விசாரணை என்று வெளியான தகவலால் தமிழ்ச் சினிமா ரசிகர்கள் மத்தியில் கடந்த இரு தினங்களாக பெரும் பரபரப்பு.

இது ஒன்றும் பொய்ச் செய்தி அல்ல. உண்மையாகவே லண்டன் போலிசார் ஸ்ரேயாவிடம் இப்படி ஒரு விசாரணையை நடத்தி உள்ளனர்.

என்ன விஷயம் என்கிறீர்களா?

வேறொன்றுமில்லை. மாதேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம்'சண்டக்காரி'. இதில் விமலும் ஸ்ரேயாவும் ஜோடி சேர்ந்துள்ளனர். கதைப்படி ஸ்ரேயா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உயரதிகாரி, விமல் அந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப நிபுணர்.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் லண்டனில் நடைபெற்றது. லண்டன் விமான நிலையத்தில் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனர்.

விமல், ஸ்ரேயா, சத்யன் மூவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தபோது ஸ்ரேயா திடீரென காணாமல் போனாராம்.

"படப்பிடிப்பின்போது கிடைத்த இடைவெளியில் விமான நிலையத்தைச் சுற்றி வந்திருக்கிறார் ஸ்ரேயா. அப்போது தன்னை மறந்து லண்டனுக்கு வரும் விமானப் பயணிகள் கடந்து வரவேண்டிய குடிநுழைவு (இமிகிரேஷன்) பகுதியைக் கடந்து விட்டார்.

"இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துப்பாக்கி ஏந்தியபோலிசார் கவனித்து அவரைச் சட்டெனச் சூழ்ந்துள்ளனர். உரிய ஆவணங்களும் காரணமும் இல்லாமல் எதற்காக இந்த முக்கியப் பகுதிக்குள் நுழைந்தீர்கள்? நீங்கள் யார்? எதற்காக லண்டன் வந்தீர்கள்? என்று கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டனர்.

"இதையடுத்து படக்குழுவினர் விரைந்து சென்று உரிய ஆவணங்களைக் காண்பித்து விளக்கமளித்தனர். நாங்கள் தந்த ஆவணங்களைச் சரிபார்த்த பிறகே லண்டன் போலிசார் ஸ்ரேயாவை விடுவித்தனர்.

"விமான நிலையத்தின் அழகைக் கண்டு தாம் சூழ்நிலையை மறந்து குடிநுழைவு பகுதிக்குள் சென்றுவிட்டதாக ஸ்ரேயா கூறினார். இதை வைத்து அனைவரும் அவரைப் படப்பிடிப்பு முடியும் வரை கலாட்டா செய்துகொண்டே இருந்தோம்," என்கிறார் ஆர். மாதேஷ்.

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்‌ரேயா நடிக்கும் படம் 'சண்டக்காரி'. இந்தப் படம் பெரியளவில் வெற்றி பெறும் என்று நம்புகிறாராம். அதன் பிறகு தமிழில் மீண்டும் வெற்றி வலம் வருவேன் என்றும் அவர் சொல்கிறார்.