சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நாயகனாக நடிக்கும் படம் ‘லாக்கப்’. அந்தக் காலத்தில் வெளியான ‘அதே கண்கள்’ போன்ற திகில் கதையாம்.
இயக்குநர் வெங்கட் பிரபு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான நிதின் சத்யா தயாரித்துள்ள படம் இது.
“வழக்கமாக வெங்கட் பிரபு நகைச்சுவையாக நடிப்பதை விரும்புவார். ஆனால் இந்தப் படத்தில் போலிஸ்காரர் வேடத்தில் நடிக்க அவரைத் தேர்வு செய்ததாக வைபவ், நிதின் சத்யா இருவரிடமும் தெரிவித்தபோது அவர்களுக்குக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.
“வெங்கட் சரியான தேர்வாக இருப்பாரா? என்று இருவருக்கும் சந்தேகம். ஆனால் இப்போது படம் பார்த்த பிறகு வெங்கட் பிரமாதப்படுத்தி இருக்கிறார் என்று பாராட்டுகிறார்கள்.
“தொடக்கத்தில் வைபவ் சாரை நேரில் சந்தித்துக் கதை சொன்னபோது அவருக்குப் பிடித்துப் போனது. உடனே சுப்பு பஞ்சுவிடம் கதை சொல்லச் சொன்னார். அவரும் கதையைப் பாராட்டிய நிலையில் நாங்களே எதிர்பாராத விதமாக நிதின் சத்யா தயாரிப்பாளராகி விட்டார்.
“இது கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடக்கும் கதை. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை திகிலடைய வைக்கும். சின்னத்திரை புகழ் வாணி போஜன், பூர்ணா, ‘வத்திக்குச்சி’ திலீபன் ஈஸ்வரி ராவ் என்று முக்கியக் கலைஞர்கள் உள்ளனர்.
“வெங்கட் பிரபு, வைபவ், நிதின் சத்யா இம்மூவரும் நீண்ட நாள் நண்பர்கள். அதுவே இப்படத்துக்குப் பலமாகி விட்டது. ‘ஒரு நடிகராக வந்திருக்கிறேன். என்னை எந்தளவுக்குப் பிழிந்து வேலை வாங்க முடியுமோ அதைச் செய்துகொள்’ என்று வெங்கட் சார் முழு சுதந்திரம் கொடுத்தார்,” என்கிறார் இயக்குநர் சார்லஸ்.