இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயனை திரையில் பார்க்கப் போகிறீர்கள் என்று பீடிகை போடுகிறார் இயக்குநர் மித்ரன்.
இவரது இயக்கத்தில் வேகமாக உருவாகி வருகிறது ‘ஹீரோ’. முதன் முறையாக இதில் அவர் சூப்பர் நாயகன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
விஷாலை வைத்து மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’க்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து சிவாவை வைத்து படம் இயக்குகிறார்.
‘‘இரும்புத்திரை’ என்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டு வந்த படமும் கூட. அதைக் காப்பாற்ற நினைத்தேன். எனவேதான் கொஞ்சம் பொறுமையாக ஒன்றரை ஆண்டுகள் கதைக்கான ஆதாரங்களைச் சேகரித்து ‘ஹீரோ‘வை ஒவ்வொரு பகுதியாக உருவாக்கி உள்ளோம். என் மனதுக்குள் இந்தக் கதை ஓடத் தொடங்கியதும் கூடவே அதற்கான ஒரு கற்பனை முகமும் ஓட ஆரம்பித்தது. அதில் கச்சிதமாகப் பொருந்திய முகம் என்றால் அது சிவகார்த்திகேயன்தான்,” என்கிறார் மித்ரன்.
சிவா என்ன சொல்கிறார்?
“படம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். படத்தில் எது தேவை, எது வேண்டாம் என முடிவெடுக்கும் நேரம் அல்லவா? அதனால் சற்றே பரபரப்பாக இருக்கிறோம்.
“இது அருமையான கூட்டணியில் உருவாகும் படைப்பு. கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளை, பஞ்சாயத்தை, அதன் உண்மை நிலைகளை அப்பட்டமாகப் பேசக்கூடிய படமாக இருக்கும்.
“பெற்றோரும் படிக்கிற குழந்தைகளும் மற்றவர்களும் என அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்லி இருக்கிறோம். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை எல்லாம் எல்லோரும் நம்புகிற ஒருவர் சொன்னால் ரொம்ப நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதிலும் குழந்தைகளுக்கு பிடித்த நாயகனாக இருந்தால் அதிகம் நல்லது என்றும் முடிவு செய்தேன். இதற்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி மித்ரன் பெரிய பாரத்தை என் மீது சுமத்தி உள்ளார்,” என்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவா நடிப்பில் நன்றாக மெருகேறி உள்ளதாகப் பாராட்டும் மித்ரன், சமூகத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் கதாபாத்திரத்தில் மிகப் பாந்தமான நடிப்பை சிவா வெளிப்படுத்தி இருப்பதாகப் பாராட்டுகிறார்.
“கதையின் பரபரப்புக்கு ஏற்பவும் பல அம்சங்களை ஆராய்ந்து, வசனங்களைச் சுருக்கமாக அமைத்திருப்போம். ஏற்கெனவே அவை சுண்டக் காய்ச்சிய மாதிரி இருக்கும்.
“சிவா போன்ற ஒரு நாயகன் அந்த வசனத்தை கவனமாக, வகையாகச் சொல்லும் போது பொட்டில் அடித்த மாதிரி இருக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு சிவா மீதான ரசிகர்களின் பார்வை மேலும் விரிவடையும், ஆச்சரியப்பட வைக்கும்,” என்கிறார் மித்ரன்.
‘ஹீரோவில்’ பா.விஜய் பாடல்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.