நடிகை அஞ்சலியுடன் எனக்குக் காதலும் இல்லை; கல்யாணமும் நடக்கப் போவது கிடையாது என நடிகர் ஜெய் கூறியுள்ளார்.
"நாங்கள் ஒருவருக்கொருவர் காதலிக்கவில்லை, நண்பர்களாகத்தான் பழகுகிறோம். ஊடகங்கள் இல்லாதது பொல்லாததை எல்லாம் திரித்து மீண்டும் மீண்டும் வதந்திகளைப் பரப்பிவருகின்றன," என ஜெய் குற்றம்சாட்டியுள்ளார்.
'எங்கேயும் எப்போதும்', 'பலூன்' உட்பட சில படங்களில் ஜெய்யும் அஞ்சலியும் சேர்ந்து நடித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தபோது காதல் வயப்பட்டதாகவும் அதுமுதல் இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இத்தகவலை ஆரம்பம் முதலே இருவரும் மறுத்துவருகின்றனர். இருந்தபோதும் தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வெளிவந்த வண்ணம்தான் உள்ளன.
இந்நிலையில் இதுபற்றி மீண்டும் இப்போது ஜெய் பேட்டி அளித்துள்ளார்.
"எனக்கே தெரியாத விஷ யங்களை மக்கள் கூறுகிறார்கள். கல்யாணம் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். அதை மறுப்பதற்கில்லை. அது முடிவானால் கண்டிப்பாக மக்களிடம் தெரிவிப்பேன்.
"அஞ்சலியுடன் காதல் எனப் பரவும் செய்தியில் உண்மை இல்லை. அஞ்சலியுடன் காதலில் இல்லை, அவரை வருங்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் எனக்கில்லை," என்று ஜெய் கூறியுள்ளார்.
ஜெய் தனது பெயரை அஜீஸ் ஜெய் என மாற்றிக்கொள்ள இருப்பதாகவும் அடுத்ததாக தனது 27வது படமான 'எண்ணித் துணிக' என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தாலும் பெயர் சொல்லும்படியான சிறந்த படங்களாக அமையவில்லையே என்ற வருத்தத்தில் உள்ளாராம் அஞ்சலி.
என்னதான் திறமை இருந்தாலும் படங்களின் வெற்றியும் ஒரு நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வெற்றி தமிழைப் பொறுத்தவரையில் அஞ்சலிக்கு தடுமாற்றமாகவே இருந்து வருகிறது.
2019ல் 'பேரன்பு', 'லிசா', 'சிந்துபாத்' ஆகிய படங்களில் அவர் சிறப்பாக நடித்திருந்தாலும் அந்தப் படங்களின் வெற்றி அவரைப் பெரிதாக பேச வைக்கவில்லை. 2020ல் அவர் நடிப்பில் ஐந்தாறு படங்கள் வெளிவர உள்ளன. இந்தப் படங்களாவது அஞ்சலிக்கு கைகொடுத்தால் அதுவே பெரும் நிம்மதி என்கின்றனர் கோடம்பாக்கத்தின் திரையுலகப் பெரும்புள்ளிகள்.

