மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பாலிவுட்டில் இருக்கும் நடிகர்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இவர்கள் நடிகர்களாக ஆனதற்கு மக்கள்தான் காரணம். மக்களுக்கு இப்படி ஒரு பிரச்சினை வரும்போது அவர்களுக்காகப் பேசவேண்டும். பாலிவுட் நடிகர்கள் கோழைகள் என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார் கங்கனா ரனாவத்.
‘தலைவி’ படப்பிடிப்பில் இருக்கும் கங்கனாவிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி கேட்கையில், “இதுபற்றி வாய் திறக்காத பாலிவுட் நடிகர்கள் வெட்கப்படவேண்டும். பாலிவுட்டில் அனைவரும் கோழைகள். அவர்கள் தினமும் இருபது முறை கண்ணாடியில் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள். ஏதாவது கேட்டால் எங்களுக்கு அனைத்தும் கிடைக்கிறது; நாங்கள் எதற்காக நாட்டைப்பற்றி கவலைப்படவேண்டும் என்பார்கள்.
“வேறு சிலர் இருக்கின்றனர். அவர்கள் நாங்கள் கலைஞர்கள். நாங்கள் ஏன் நாட்டைப்பற்றி கவ லைப்படவேண்டும் என்பார்கள். அவர்களையெல்லாம் அழைத்து வந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து கருத்து சொல்ல வைக்கவேண்டும். அதனால்தான் அவர்களை எல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
“அவர்களின் நடவடிக்கையை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இணையத்தில் ஏதாவது பதிவு செய்தால் போதும் என நினைக்கின்றனர். அது மட்டும்தான் அவர்களுடைய வேலையா?
“நடிகர்கள் அனைவரும் மக்களால் உருவாக்கப்பட்டவர்கள். அப்படி இருக்கும்போது மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால் அவர்கள் முன்னணி நாயகர்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களுக்கு அதிகாரம் கொடுத்திருப்பது இன்ஸ்டகிராமில் பதிவு போடவும் போதை பார்ட்டிகள் நடத்த மட்டும்தானா?
“திரைத்துறையினர் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார்கள். அவர்கள் கோழைகள், முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் கோழைகளாக இருப்பதால்தான் திரைப் பின்னணி இல்லாதவர்களுக்குப் பிரச்சினை கொடுக்கிறார்கள். பெண்களை அவமதிக்கிறார்கள்.
“அவர்களைத் தலைவர்கள் போன்று பார்ப்பதை மக்கள் நிறுத்தவேண்டும். திரையில் மட்டும் மக்களுக்காக போராடுபவர்கள் நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காகப் போராடவேண்டும். அப்படிப்பட்டவர்கள் யார் என்னும் தெளிவு ரசிகர்களுக்கு இருக்கவேண்டும்,” என்று காட்டமாக பதிலளித்தார்