திரைத்துறையில் தனக்கு எந்த எதிர்காலத் திட்டமும் இல்லை என்கிறார் மலையாள ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றழைக்கப்படும் நடிகை மஞ்சுவாரியர்.
தமிழில் தனுஷுடன் ‘அசுரன்’ படத்தில் அற்புதமாக நடித்திருந்த இவர், அடுத்து இந்தியிலும் நடிக்கவிருக்கிறார். தனது வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அவர் அண்மையில் செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
“நான் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் வென்றபோது எனது புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது.
“அதை இயக்குநர் லோகிததாஸ் பார்த்ததுதான் என் வாழ்க்கையில் முதல் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதனால் ‘சல்லாபம்’ படத்தில் நான் கதாநாயகியானேன். அப்போது எனக்கு சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாது.
“நான் முதல் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோதும் நடிகையாக தொடர வேண்டும் என்று கனவு கண்டதில்லை. “ஆனால் ஒன்றன்பின் ஒன்றாக வாய்ப்புகள் வந்தன. முதலில் நிறைய நடித்தேன். இடைவேளை ஏற்பட்டது. மீண்டும் நடிக்கிறேன்.
“இவைகளைப் பற்றி எல்லாம் நான் சிந்திப்பதும் இல்லை. கனவு காண்பதும் இல்லை. “எதிர்காலத்தில் எவ்வளவு படங்களில் நடிக்கும் திட்டமும் என்னிடம் கிடையாது.
“வாழ்க்கை நதியில் நீரின் போக்குக்கு ஏற்ப நான் நீந்திக்கொண்டிருக்கிறேன். இனியும் அப்படித்தான். அதுவே சுகமானது.
“ஒருவேளை நான் நடிகையாகி இருக்காவிட்டால், மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆகியிருக்க மாட்டேன். சினிமாவோ, நடனமோதான் என் விதி. அவற்றைச் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்.
“நான் தமிழில் நடிக்கவேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். முன்பு பலமுறை பேச்சுவார்த்தை நடந்தும் கடைசி நேரத்தில் வாய்ப்புகள் கை விட்டு போயிருக்கின்றன.
“அதற்கு நான் காரணமல்ல. ஆனால் அசுரன் மூலம் எனக்கு தமிழில் அற்புதமான தொடக்கம் கிடைத்திருக்கிறது. அது சவாலான வேடம்.
“தனுஷ், வெற்றிமாறன் குழுதான் அதில் ஹைலைட். அந்த விழாக்களில் தமிழில் பேசினேன். அது திட்டமிட்டு ரொம்ப முயற்சி செய்து அமைந்த பேச்சு அல்ல. இயல்பாக அப்படியே பேசியது. அதற்கு நிறைய பாராட்டு கிடைத்தது.
“எனது தந்தை கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் நான் பிறந்தது நாகர்கோவிலில். அங்குப் பள்ளியிலும் படித்தேன். எனக்குத் தமிழ் எழுத படிக்க தெரியும்.
“புதுமையான, அழுத்தமான கதாபாத்திரங்களில்தான் நடிக்க வேண்டும் என்ற எந்த ஆசையும் எனக்கு இல்லை. வருகிற வாய்ப்பை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன்,” என்றார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசிய அவர், “அன்றும், இன்றும் நான் நேர்மறையாகவே சிந்திக்கும் பெண். எதுவும் ஒரு எல்லையை கடந்து என்னை பாதிக்க நான் அனுமதிக்கமாட்டேன்.
“நான் எதையும் மனப்பூர்வமாக தடுத்து நிறுத்திடவில்லை. இத்தனை வருடங்களாக கிடைத்த வாழ்க்கை அனுபவங்களை வைத்து ஒவ்வொன்றையும் அதன் போக்கில் போக அனுமதிக்கிறேன்.
“இனி என்ன வரும் என்பதை இப்போது நம்மால் சொல்லமுடியாது. இதுவரை எந்த முடிவும் ரொம்ப ஆலோசித்து, திட்டமிட்டு, பிடிவாதத்தோடு எடுத்ததில்லை. திடீரென்று எடு்த்த முடிவுகளே என் வாழ்க்கையில் உள்ளன,” என்றார்.
இந்தி திரையுலக வாய்ப்பு குறித்து சொன்ன அவர், “நேரம் வரும்போது அதுவும் நடக்கும். அதற்கான கதை விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு அது நடந்துவிடும் என்றும் இப்போது சொல்வதிற்கில்லை.
“அசுரனில் நடிப்பேன் என்று அதற்கு முந்தைய வருடம் நான் நினைத்ததில்லை. ஆனால் அது நடந்தது. அதுபோல் என் வாழ்க்கையில் அசாதாரண விஷயங்கள் எல்லாம் மிக சாதாரணமாக திடீரென்று நடக்கும்,” என்றார்.