‘பருத்திவீரன்’ மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நிரந்தரமான இடத்தைப் பெற்றிருப்பவர் பிரியாமணி. திரையுலகில் அறிமுகமாகி 17 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் பரபரப்பாக வலம் வருகிறார் இந்த ‘முத்தழகி’.
ஆனாலும், தமிழ்த் திரையுலகில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
தற்போது இணையத் தொடர்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு தளங்களில் பிரியாமணியைப் பார்க்க முடிகிறது.
“எனது திரை வாழ்க்கையின் தொடக்க காலத்திலேயே பாரதிராஜா, அமீர் போன்ற பெரிய இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளேன்.
“அந்த வகையில் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. அவை எல்லாம் இனிய அனுபவங்கள். என்னுடைய முதல் பட இயக்குநர் பாரதிராஜா. அடுத்து பாலுமகேந்திரா சாருடன் பணியாற்றினேன். தமிழ்த் திரையுலகின் இரு மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் அடுத்தடுத்து பணியாற்றியதே மிகப்பெரிய சாதனை என்பேன்.”
இதையெல்லாம் உற்சாகமாகக் குறிப்பிட்டாலும் தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை எனும் வருத்தம் பிரியாமணிக்கு இருக்கவே செய்கிறது. கடைசியாகத் தாம் நடித்த நேரடித் தமிழ்ப் படத்தின் தலைப்புகூட தனக்கு நினைவில்லை என்கிறார்.
“பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலமாகவே நான் தமிழில் அறிமுகமானேன். அதன்பிறகு தமிழில் அதிக படங்களில் நடிக்க வேண்டும் எனும் ஆர்வம் இயல்பாகவே எனக்கு இருந்தது.
“என்னுடைய திறமையை நிரூபிக்க கைகொடுத்தது கோடம்பாக்கம்தான். தேசிய விருது பெற்ற பிறகும் கோடம்பாக்கத்தில் எனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இப்போதும் உள்ளது,” என்று சொல்லும் பிரியாமணி, இப்போதும்கூட தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆர்வம் இருப்பதாகச் சொல்கிறார்.
நல்ல கதைகளுக்காக இதுவரை பொறுமையுடன் காத்திருந்ததாகக் குறிப்பிடுபவர், தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ற நல்லதொரு கதை அமைந்திருப்பதாகச் சொல்கிறார்.
“எப்போதுமே நல்ல கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களையே நான் தேர்ந்தெடுப்பேன். நாள்தோறும் ஏதேனும் சில கதைகளைக் கேட்டபடி இருக்கிறேன்.
“எனக்கு ஒத்து வரக்கூடிய கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்கிறேன். தமிழைப் பொறுத்தவரை நல்லதொரு வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. அதுகுறித்த பெரிய அறிவிப்பு விரைவில் வெளிவரும். தற்போது மேற்கொண்டு ஏதும் தெரிவிக்க இயலாது,” என்று சொல்லும் பிரியாமணி, ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் ‘தலைவி’யில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல என்கிறார்.
“அது வெறும் செய்தியாக மட்டுமே உள்ளது. இதுவரை என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை. தயாரிப்புத் தரப்பு உறுதி செய்யாமல் நான் எதுவும் சொல்ல இயலாது,” என்கிறார்.
எதிர்மறை வேடங்கள் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதிலும் குறிப்பாக ‘படையப்பா’வில் வரும் நீலாம்பரியைப் போன்ற முழு நீள எதிர்மறை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் தமது நீண்ட நாள் விருப்பம் என்கிறார் பிரியாமணி.
“எனது குரலும் நடிப்பும் நீலாம்பரி போன்ற கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் எனப் பலரும் கூறியுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு வேடத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்கிறார் பிரியாமணி.
கொசுறு: தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறாராம். அது பிரம்மாண்டமான படைப்பாக இருக்கும் என்றும் நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.