நடிகை ஸ்ரீரெட்டியின் புகார்ப் பட்டியலில் இடம்பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தமுறை அவரிடம் மீண்டும் சிக்கியவர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்.
ஹைதராபாத்தில் இருந்தபோது தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்துப் பகிரங்கமாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி. அதனால் எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க இயலாமல் சென்னையில் குடியேறிவிட்டார்.
அவர் வெளியிட்ட சில தகவல்களாலும் புகைப்படங்களாலும் தமிழ், தெலுங்கு திரையுலகங்களைச் சேர்ந்த பல பிரபலங்களுக்குச் சங்கடம் ஏற்பட்டது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் தெலுங்கின் முன்னணி நடிகருமான பவன் கல்யாண் பெண்களை மதிக்கத் தெரியாதவர் என்றும், பல இளம் பெண்களைச் சீரிழித்து கர்ப்பமாக்கி விட்டதாகவும் சாடியுள்ளார் ஸ்ரீரெட்டி.
பவன் கல்யாணால் வாழ்க்கையில் ஒருபோதும் உயர முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், பவனின் ரசிகர்களுக்குப் பயந்து தாம் சென்னைக்குக் குடிபெயர்ந்ததாகக் கூறப்படுவது உண்மையல்ல என்கிறார்.
“எனக்கு எந்தப் பயமும் கிடையாது. இப்போதும்கூட ஹைதராபாத்தில் நான் ஏற்கெனவே வசித்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வருகிறேன். பவன் கல்யாணால் பாதிப்புக்கு உள்ளான 5 பெண்கள் அவர் மீது புகாரளிக்கத் தயாராகி வருகிறார்கள். இதேபோல் மேலும் சிலரும் வருவார்கள்.
“ஆந்திர முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார் பவன் கல்யாண். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. அவரால் பஞ்சாயத்துத் தலைவராகக் கூட வர முடியாது,” என்று வறுத்தெடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி.
இதற்கிடையே இவருக்கும் நடிகை தமன்னாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக புதுத் தகவல் பரவி வருகிறது. தமன்னா நடித்துவரும் இணையத் தொடரின் படப்பிடிப்பு காரணமாக தமக்குத் தொல்லை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் ஸ்ரீரெட்டி.
சென்னையில் இவர் வசிக்கும் வீட்டின் அருகேதான் இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
“இந்தத் தொடரில் பணியாற்றுபவர்களால் அன்றாடம் ஏதேனும் ஒரு பிரச்சினை முளைக்கிறது.
“அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. கடந்த 10 நாட்களாக பலவிதமான தொல்லையை அனுபவித்து வரும் நிலையில் இனியும் என்னால் பொறுமை காக்க முடியாது.
“படக்குழுவினர் வாகனங்களை கண்ட இடத்திலும் நிறுத்துகிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
“இரு தினங்களுக்கு முன்பு என் வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த எனது காரை யாரோ சேதப்படுத்தி உள்ளனர். எனது காரின் இரு பக்கக் கதவுகளும் சேதமடைந்து உள்ளன,” என்கிறார் ஸ்ரீரெட்டி.
இதையடுத்து இந்த இணையத் தொடரின் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் மனோஜ் என்பவர் மீது தனக்குச் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது காரைச் சேதப்படுத்திய மர்ம நபர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.