தயார்நிலையில் 'சூரரைப் போற்று'

3 mins read
514c4ab5-b521-47dd-aa03-62fc67453e33
`சூரரைப் போற்று' வெளியீடு காண தயாராக உள்ளது. இந்தப் படத்தில் முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார் அபர்ணா முரளி. படம்: ஊடகம் -

இப்போதுதான் பட அறிவிப்பு வெளியானது போல் இருக்கிறது. அதற்குள் `சூரரைப் போற்று' வெளியீடு காண தயாராக உள்ளது.

இந்தியாவில் இயங்கி வந்த ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது இப்படம். சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இவரது முதல் படமான 'துரோகி' வெளியாவதற்கு முன்பே 'சூரரைப் போற்று' படத்துக்கான தொடக்கம் அமைந்துவிட்டது போல் உணர்ந்தாராம்.

"கடந்த 2010ஆம் ஆண்டு ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவரான ஜி.ஆர்.கோபிநாத்தின் பேட்டியைப் பார்த்தேன். அதைப் படித்ததில் இருந்தே இவரைப் போன்ற ஒருவரது வாழ்க்கையைப் படமாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

"ராணுவத்தில் இருந்து விலகியபோது அவர் கையில் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது.

"அதை வைத்துக் கொண்டு விமான நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற கனவை கோபிநாத் தெரிவித்தபோது எல்லோரும் கேலி செய்துள்ளனர்.

"ஆனால் ஒருவர் தமது கனவை நம்பி உண்மையாக உழைத்தால் அது நனவாகும் என்பதை இளைய தலைமுறைக்குச் சொல்லுங்கள் என்கிறார் கோபிநாத்.

"அதன் பிறகே 'சூரரைப் போற்று' மெல்ல என் மனதில் படமாக படர்ந்தது," என்கிறார் சுதா கொங்கரா.

இது முழுக்க முழுக்க ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கைக் கதை மட்டும்தான் என்று சொல்ல முடியாது என்று குறிப்பிடுபவர், படத்தில் சூர்யாவின் பெயர், தோற்றம் எதுவுமே அவரை நினைவூட்டாது என்றும் சொல்கிறார்.

சூர்யாவை நடிக்க வைக்க என்ன காரணம்?

"அவரது அர்ப்பணிப்பும் தொழில் பக்தியும் தான் காரணம். இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் உண்மையாக நடந்ததுதான். அவற்றைப் பார்க்கும் போதும் மக்களுக்குப் புதிதாக இருக்கும். காரணம், கோபிநாத் என்னென்ன சாதனைகள் செய்துள்ளார் என்பது பலபேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

"இந்தக் கதையை முழுமையாக எழுதி முடித்ததும், எனக்கே கோபிநாத்தை நினைக்கும்போது பிரமிப்பாக இருந்தது. அவரது வாழ்க்கையில் இருந்து எதை எடுப்பது, தவிர்ப்பது என்பது பெரும் சவாலாக இருந்தது," என்கிறார் சுதா.

'காப்பான்' முடிந்த கையோடு 'சூரரைப் போற்று' பட வேலைகள் துவங்கியதாம். அப்போது சூர்யா தன் எடையைக் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்டுக் கொள்ள, அடுத்த சில தினங்களில் அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எதிரே வந்து நின்றாராம் சூர்யா.

இப்படம் பெரும் பொருட்செலவில் பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது. விமானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய உள்ளன. ஒரு விமானத்தின் ஒரு நாள் வாடகை மட்டுமே ரூ.45 லட்சமாம்.

"வேறு தயாரிப்பாளர் என்றால் எதற்காக இவ்வளவு செலவு, எதற்காக இந்தக் காட்சி? என்றெல்லாம் கேள்விகள் கேட்க வாய்ப்புண்டு. அதனால் தாமே இப்படத்தை தயாரிப்பதாகச் சொல்லிவிட்டார் சூர்யா. இது கதை மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது," என்கிறார் இயக்குநர் சுதா.

இவரும் சூர்யாவும் நீண்ட நாள் நண்பர்கள். ஒவ்வோர் ஆண்டும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகைக்கு சூர்யா வீட்டிற்குச் செல்வாராம். அவரும் அன்போடு ராக்கி கட்டுவது வழக்கமாக இருந்துள்ளது.

"கடந்தாண்டும் அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது நான் எந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன், எதிர்காலத் திட்டங்கள் குறித்தெல்லாம் விசாரித்தார்.

"அப்போதுதான் 'சூரரைப் போற்று' கதைக்காக பலரையும் சந்தித்துப் பேசியது குறித்து 44 பக்கங்களில் சுருக்கமாக எழுதி வைத்திருந்ததை அவரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன்.

அவருக்கும் கதை பிடித்துப்போனதால் இன்று படமாக வளர்ந்திருக்கிறது," என்கிறார் சுதா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு நடிகர் மோகன் பாபு நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். வசனங்களை தெலுங்கில் எழுதி வைத்து, கச்சிதமாக மனப்பாடம் செய்து நடித்து அசத்தினாராம்.

முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார் அபர்ணா முரளி. மேலும் கருணாஸ் உள்ளிட்ட இதர நடிகர்களும் தனக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கியதாக நன்றியுடன் குறிப்பிடுகிறார் சுதா. 23 முக்கிய கதாபாத்திரங்களை வைத்து, 56 வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று, 60 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்தாராம். அதற்குதான் இந்த நன்றி.