ஜனநாதன் படம் என்றாலே கோடம்பாக்கத்திலும், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்படுவது வழக்கம். இப்போதும் அத்தகைய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'லாபம்'. சேதுபதி ஜோடியாக ஷ்ருதிஹாசன் நடிக்கிறார்.
படத்துக்குப் பூசை போட்ட கையோடு திட்டமிட்டபடியே படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. வில்லனாகப் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்கிறார். தென்காசி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகத் தகவல்.
தற்போது இயக்குநர் மணிகண்டனின் 'கடைசி விவசாயி', சீனு ராமசாமியின் 'மாமனிதன்' உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் இவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் தோன்றுவதாகத் தகவல்.
இந்நிலையில் பெரிய நடிகரின் மகள் எனும் பந்தா இல்லாமல் ஷ்ருதி மிகவும் எளிமையான பெண்ணாகப் பேசிப் பழகுகிறார் எனப் பாராட்டுகிறார் சேதுபதி.
தாம் பெரிய நடிகரின் மகள் என்பதற்காக ஷ்ருதிஹாசன் எந்தவிதத்திலும் தமக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விரும்புவதில்லையாம். அந்தப் பண்பை தாம் மதிப்பதாகச் சொல்கிறார் சேதுபதி.
"நான் கமல் சாரின் நடிப்பை எந்தளவு அனுபவித்து ரசித்திருக்கிறேன் என்று மேடையிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறேன். அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
"அதற்காக நான் ஷ்ருதியிடம் வாய்ப்பு கேட்க மாட்டேன். எனக்கான வாய்ப்பை கமல் சாரே நேரடியாக வழங்குவார் என நம்புகிறேன்," என்கிறார் சேதுபதி.
முன்பெல்லாம் தனது படம் வெளியீடு காணும் சமயத்தில் பணப் பிரச்சினை ஏற்பட்டால் தயாரிப்பாளருக்கான தனது சம்ப ளத்தை விட்டுக் கொடுப்பது சேதுபதியின் வழக்கமாக இருந்தது. இப்படியே இருந்தால் நிலைமை மோசமாகிவிடும் என திரைப்புள்ளிகள் சிலர் அறிவுறுத்தியதை அடுத்து அந்தப் பழக்கத்தைக் கைவிட்டுள்ளாராம்.

