தீபாவளி போன்று பல பண்டிகைகளைக் கொண்டாடி னாலும் தமிழர் திருநாளான பொங்கல் நமக்கு எப்போதுமே தனித்துவமானது. நம்மை வாழ வைக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் கால்நடைகளையும் நாம் மதித்துப் போற்றிக் காக்க வேண்டும். காலவெள்ளத்தில் நம் பாரம்பரியம் காவு போகாமல் காப்பதும் அவசியம் என்கிறார் நடிகை அதுல்யா ரவி.
‘நாடோடிகள்-2’, அமலாபால் தயாரிக்கும் ‘கடாவர்’ படங்களுக்கான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. விரைவில் இப்படங்கள் திரைக்கு வரவுள்ளன. ஜெய்யுடன் ‘எண்ணித்துணிக’ படத்திலும் நடித்து வருகிறேன் என்று கூறும் அதுல்யா, “என்னைத் தேடி பட வாய்ப்புகள் அதிகம் வந்தாலும் நல்ல கதைகளாகப் பிடித்ததைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன்,” என்கிறார்.
“நானாகத் திரைத்துறைக்கு விரும்பி வரவில்லை. கல்லுாரி காலத்தில் நண்பர்கள் சேர்ந்து மூன்றாண்டுகளாய் எடுத்த படம்தான் ‘காதல் கண் கட்டுதே’. அந்தப் படத்துக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.
“எதிர்பார்ப்புக்கு மீறிய வரவேற்பு கிடைத்ததால் நடிப்பின் மீது ஆர்வம் பிறந்தது. இப்போது இத்தொழிலை மிகவும் நேசிக்கிறேன்.
“உங்களின் கிறங்கடிக்கும் அழகின் ரகசியம் என்ன என்று பலரும் கேட்கிறார்கள். ஓரளவு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறேன். அதிகளவு காய்கறிகளை எடுத்துக்கொள்வேன். படப்பிடிப்பு இருந்தால் உடற்பயிற்சிக் கூடத்திற்கு ஓய்வு விட்டுவிடுவேன்.
“நான் பிறந்த கோவையில் உள்ள கிராமத்தில் ஒரு தொழுவம் வைத்து பசு வளர்க்கிறோம். எனது தாத்தா ஒரு மாட்டு வியாபாரி. அவர் இருக்கும்போது இரு ஜல்லிக்கட்டு மாடுகளும் இருந்தன. எனவே குழந்தைப் பருவம் முதல் மாடுகள் மீது அலாதி பாசம் உண்டு. ஜல்லிக்கட்டு போட்டி நம் தமிழர் பாரம்பரியத்தின் அடையாளம் என்பதால் அந்த போட்டியைக் கண்டு ரசிக்க ஈடுபாடு கூடியுள்ளது,” என்கிறார் அதுல்யா.
பலமுறை தீர்மானம் எடுத்து தோற்றதுதான் மிச்சம். நேரத்திற்கு சாப்பிட வேண்டும்ணு தீர்மானம் எடுத்தால் கூட காப்பாற்ற முடிவதில்லை. அதனால் இம்முறை, எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்ங்கிற வேண்டுதல் மட்டும் தான்.