‘தம்பி’ படத்தில் நடித்தது இனிமையான அனுபவம் என்கிறார் ஜோதிகா. இந்தப் படத்தை அவருடைய சொந்தத் தம்பிதான் தயாரித்துள்ளார். எனவே, பார்ப்பவர்களிடம் எல்லாம் ஒரு தம்பி தயாரிக்க, இன்னொரு தம்பியுடன் நடித்தேன் என்று கார்த்தியையும் குறிப்பிட்டு நெகிழ்கிறார் ஜோ.
படப்பிடிப்பின்போது இவரது தாயாரும் ஒருநாள் வந்திருந்தாராம். அப்போது வழக்கம்போல் அவரிடம் ‘சாப்பிடுங்கம்மா’ என்று ஜோதிகா சொல்ல, ‘நான் கதாநாயகியின் அம்மா வாக வரவில்லை, தயாரிப்பாளரின் தாயாக வந்துள்ளேன்... என்னை நன்கு கவனித்துக் கொண்டனர்...’ என்று ஜாலியாகக் கிண்டலடித்தாராம் ஜோவின் தாயார்.
“அம்மா இப்படிச் சொன்னபோது அவர் முகத்தில் ஒருவித பெருமையையும் மகிழ்ச்சியையும் காண முடிந்தது. அதேபோல் எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது. ‘தம்பி’ படம் ஒரு குடும்பத்துடன் இருக்கும் உணர்வை எனக்குத் தந்தது. இயக்குநர் ஜீத்து ஜோசப் சாரின் குடும்பம், மும்பையிலுள்ள என்னுடைய குடும்ப உறவினர்கள், சென்னையில் உள்ள குடும்பத்தார் என எல்லோருமே படப்பிடிப்பின்போது அடிக்கடி வந்து சென்றனர். அதனால் உண்மையாகவே இது குடும்பப் படம்தான் என்பேன்.
“அது ஒரு மகிழ்ச்சி என்றால், கார்த்தி என்ற இன்னொரு தம்பியுடன் இணைந்து நடித்ததும் நான் எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம். அவருடன் நடித்தபோது திரைப்படத்தில் நடிப்பது போன்ற உணர்வே இல்லை. வீட்டில் இருவரும் பேசிக்கொள்வது மாதிரிதான் இருந்தது.
“கார்த்தியுடன் நடிப்பது எளிது. சூர்யாவுடன் இணைந்து நடிப்பதுதான் சிரமம். அவருடன் நடித்தால் நிச்சயம் சண்டை வரும். உடனே ஏதோ பிரச்சினை என்று நினைத்துவிடாதீர்கள். பொதுவாக கணவன் மனைவிக்கு இடையே வீட்டில் வரக்கூடிய சண்டையைத்தான் குறிப்பிடுகிறேன்,” என்று சிரித்தபடியே சொல்லும் ஜோதிகா, கார்த்தி சக கலைஞர்களுக்கு அளிக்கும் மரியாதை பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்கிறார்.
‘பருத்திவீரன்’ படத்தில் தொடங்கி இதுநாள் வரையும் கார்த்தி தன்னுடன் நடிக்கும் மற்றவர்களுக்கும் சமமான இடம் கொடுக்க முயற்சிப்பதாகப் பாராட்டுகிறார்.
“ரஜினி சாரிடமும் இந்த நல்ல குணம் இருப்பதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ‘சந்திரமுகி’யில் நடித்தபோது முதல்நாள் படப்பிடிப்பன்று என்னிடம் பேசிய அவர், ‘இந்தப் படத்தின் பேரே உன்னை மனதில் வைத்துதான் வைக்கப்பட்டுள்ளது. அதனால் முடிந்த அளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். எவ்வளவு பெரிய மனிதர் என்று நினைக்கத் தோன்றியது.
“கார்த்தியும் கிட்டத்தட்ட அப்படித்தான். உடன் இருப்பவர்களுக்கும் ரசிகர்களிடம் பாராட்டு கிடைக்கவேண்டும் என நினைக்கிறார்.”
தன்னை விமர்சகர்கள் சிலர் ‘பெண் கமல்ஹாசன்’ என்று சொல்வதைத் தம்மால் ஏற்க முடியவில்லை என்று குறிப்பிடுபவர், தம்மைப் பொறுத்தவரை, பெண் கமல் என்றால் அது நடிகை ஊர்வசிதான் என்கிறார்.
ஒரு படத்தில் நடிக்கும் முன்பு தன்னுடைய கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிப்பதாகச் சொல்லும் ஜோ, திரைக்கதை அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவாராம். தற்போது ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஜோதிகா.
பிரெட்ரிக் இயக்கியுள்ள இப்படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜ், பிரதாப் போத்தன் ஆகியோரும் உள்ளனர். இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அநேகமாக அடுத்த மார்ச் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.