‘பட்டாஸ்’ படத்தில் தனது நடிப்பு சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டுவதால் ஏற்கெனவே புன்னகை அரசி என்று பெயரெடுத்துள்ள சினேகாவின் முகத்தில் கூடுதல் மலர்ச்சியைக் காண முடிகிறது.
இந்தப் படத்துக்காக அவர் வெகுவாக மெனக்கெட்டதாகப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
பண்டைய தமிழர்கள் அதிகம் பயின்ற அடிமுறை என்ற தற்காப்புக் கலையை மையமாக வைத்து உருவாகி உள்ளது ‘பட்டாஸ்’. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பெரும்பாலான விமர்சகர்கள் சினேகாவின் நடிப்பை வெகுவாகப் பாராட்டி உள்ளனர். கதைப்படி தனுசின் ஜோடியாகவும் தாயாகவும் நடித்துள்ளார் சினேகா.
மேலும் படத்துக்காக ‘அடிமுறை’ தற்காப்புக் கலையையும் கற்றுக் கொண்டாராம்.
தற்போது குவியும் பாராட்டுகள் அனைத்துக்கும் இயக்குநர் துரைசெந்தில் குமார்தான் சொந்தக்காரர் என மிகவும் அடக்கமாகப் பேசுகிறார் சினேகா.
“இப்படியொரு அருமையான கதை, சிறப்பான கதாபாத்திரத்துடன் என்னிடம் வந்த இயக்குநருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
“ஒரு நடிகர் பிரகாசிக்கிறார் என்றால், அதற்கு இயக்குநர்தான் காரணம் என்பேன்.
“ஒரு படத்தில் பணியாற்றும் அனைத்துக் கலைஞர்களையும் நல்ல பெயரெடுக்க வைக்கும் மிகப்பெரிய பொறுப்பை இயக்குநர் தான் தன் தோள்களில் சுமக்கிறார். என்னைப் போன்ற நடிகைகளுக்கு அசாதாரணமான, தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்கி எங்கள் திறமையைக் கச்சிதமாக வெளிப்படுத்த வைப்பதும் இயக்குநர்கள்தான்.
“அதிலும் தனுஷ் போன்ற ஆகச்சிறந்த ஒரு நடிகருடன் இணைந்துள்ள படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுவது பெரிய சவால். அந்தச் சவாலைக் கச்சிதமாக எதிர்கொண்டதாக கருதுகிறேன்.
“அடிமுறை என்ற அற்புதமான தற்காப்புக் கலையை ஓரளவு கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. எனக்குப் பக்கபலமாக நின்ற படக்குழுவுக்கும் மற்றவர்களுக்கும் என் நன்றிகள்,” என்கிறார் சினேகா.
தற்காப்புக் கலையின் தாய்மண் தமிழகம் என்பதை உணர்த்தும் ஒரு படைப்பில் தாம் பங்கேற்றதில் பெருமையடைவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்துவரும் தனுஷுக்கும் நன்றி தெரிவிப்பதாகச் சொல்கிறார்.
இந்நிலையில் சினேகாவின் அர்ப்பணிப்பும் கடும் உழைப்பும்தான் அவரைத் தேடிவரும் பாராட்டுகளுக்குக் காரணம் என்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். தாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறிவிடும் திறமை சினேகாவுக்கு இருப்பதாகவும் பாராட்டுகிறார்.
“ஏராளமான படங்களில் நடித்து முடித்தவர் சினேகா. தனது இத்தனை ஆண்டு கால சினிமா அனுபவத்தின் மூலம் தாம் கற்றுக்கொண்ட அனைத்து நுணுக்கங்களையும் தன் நடிப்பில் மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.
“தனது கதாபாத்திரத்துக்காக தன் ஆன்மாவையே அதற்குள் செலுத்தும் வித்தையை அறிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் அவரால் இந்தளவு உயர்வு காண முடிந்திருக்கிறது. அவரது நடிப்புக்குக் கிடைத்துள்ள பாராட்டு ‘பட்டாஸ்’ படக்குழுவுக்குப் பெருமையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது,” என்கிறார் துரை செந்தில்குமார்.
‘பட்டாஸ்’ தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜனும் தன் பங்குக்கு சினேகாவைப் பாராட்டுகிறார்.
“ஒரு நடிகருக்குத் திரையுலகில் மறுபிரவேசம் என்பதெல்லாம் கிடையாது. திறமையான கலைஞர்கள் எப்படியும் ஓர் இடைவெளிக்குப் பிறகு தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள். அதிலும் கடும் உழைப்பாளிகள் என்றுமே நட்சத்திரக் கலைஞர்களாக மின்னுவர்கள்.
“முழு ஈடுபாட்டுடன் நடிக்கும் நடிகர்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதை சினேகா நிரூபித்துள்ளார். எங்களுடைய சத்யஜோதி படத் தயாரிப்பு நிறுவனம் பெண் கதாபாத்திரங்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது,” என்கிறார் டி.ஜி. தியாகராஜன்.
ஆக மொத்தத்தில் திரையுலகில் அடுத்த சுற்றுக்குத் தன்னைத் தயார்ப்படுத்தி வருகிறார் சினேகா.