‘உத்தரவு மகாராஜா’வுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்து ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் உதயா.
இதில் அவரது நெருங்கிய நண்பரான விதார்த் முக்கிய பாத்திரத்தை ஏற்றுள்ளார்.
இந்தத் தலைப்புக்கான உரிமை தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் இருந்ததாம். பலரும் அவரிடம் இந்தத் தலைப்பை தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் யாருக்கும் அசைந்துகொடுக்காதவர், உதயா தரப்பு கேட்டதும் உடனே தந்தாராம்.
“ஐசரி சார் தனது சொந்தப் படங்களுக்கு இந்தத் தலைப்பை வைக்காமல் எனக்காக விட்டுக்கொடுத்தார். மற்றபடி ‘அக்னி நட்சத்திரம்’ படத்துக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தலைப்பில் மற்றுமே ஒற்றுமை காணப்படும்.
படத்தின் கதை?
“வித்தியாசமான குற்றச்செயல்கள், திகில் நிறைந்த சம்பவங்கள் என்று பல விஷயங்களை உள்ளடக்கிய கதை இது. ஒவ்வொரு காட்சியும் கண்டிப்பாக ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கும். ‘உத்தரவு மகராஜா’வுக்குப் பிறகு அடுத்து நடிக்கும் படம் கதைக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி இந்தக் கதையைத் தேர்வு செய்தேன்.”
உங்களுடைய கதாபாத்திரம்?
“தீனா என்ற வேடத்தில் திரையில் தோன்றுவேன். படத்தில் என்னுடைய நடிப்பு இரண்டு வெவ்வேறு கோணங்களில் இருக்கும். உடல்மொழி, வசனங்களில் வித்தியாசத்தைக் காண முடியும். நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பு இப்போது தான் அமைந்துள்ளது,” என்கிறார் உதயா.
இப்படத்தில் ஷ்ருதி வெங்கட் தான் இவரது ஜோடி. ‘தடம்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்த பிறகே இதில் ஒப்பந்தம் செய்தனராம். மிகவும் கச்சிதமாக நடித்ததாகப் படக்குழு பாராட்டுகிறது.
விதார்த்துக்கு என்ன வேடம்?
“விதார்த் இப்போது நாயகனாக நடித்து வருகிறார். எனினும் என் மீதான அன்பு காரணமாக நடித்துள்ளார். அவர் நல்ல கலைஞன் என்பதைக் கடந்து மிகவும் நல்ல மனிதர்,” என்கிறார் உதயா.