‘சித்தி-2’ தொலைக்காட்சி தொடர் தற்போது ஒளியேறி வருகிறது.
கடந்த 1990களில் வெளியான ‘சித்தி’ தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அச்சமயம் இரவு 9.30 மணிக்கு அந்தத் தொடர் ஒளியேறும்போது சென்னையின் பரபரப்பான அண்ணாசாலைகூட வெறிச்சோடிப் போனதாகச் சொல்வார்கள்.
இந்நிலையில், அந்தத் தொடரின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக கூறப்பட்டது. ஆனால் ‘சித்தி-2’ முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல என்றும் இது ஒரு புதுக்கதை என்றும் கூறுகிறார் ராதிகா.
இம்முறை சித்தி சாரதா (ராதிகா)வின் கணவர் ஷண்முகப்பிரியனாக பொன்வண்ணன், அவரது தங்கையாக (சாரதாவின் நாத்தனார்) ஷில்பா ஆகியோருடன் அருண்மணி, நிகிலா, அஷ்வின், மகாலட்சுமி என பலரும் இத்தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
“இது இன்னொரு சித்தியின் கதை. ஆனால் இதிலும் நானே முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். வெறும் தொலைக்காட்சித் தொடராக மட்டும் இல்லாமல் அனைத்துக் குடும்பங்களிலும் நடக்கக்கூடிய விஷயங்களின் தொகுப்பாகவே சித்தி உருவானது. அதனால் ஒவ்வொருவரும் சித்தியின் கதையுடன் தங்களைப் பொருத்திக்கொள்ள முடிந்தது.
“வழக்கம்போல் இந்தப் புதிய தொடரிலும் பல்வேறு சஸ்பென்ஸ், திடீர் திருப்பங்களை வைத்திருக்கிறோம். முதற்கட்டமாக சித்தி-2 என்ற தலைப்பே ரசிகர்களை ஈர்த்துவிட்டது,” என்கிறார் ராதிகா.
முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் என்றாலும், ‘சித்தி’ என்றே தலைப்பு வைக்குமாறு சன் தொலைக்காட்சி நிறுவனம் கேட்டுக்கொண்டதாம்.
“இம்முறை எனக்கு ஜோடியாக பொன்வண்ணன் நடிக்கிறார். ‘அண்ணாமலை’ தொடருக்குப் பிறகு சினிமாவில் பரபரப்பாக இருந்த அவர், மீண்டும் சின்னத்திரை பக்கம் வரவில்லை. அவரிடம் ‘சித்தி-2’ கதையைச் சொன்னபோது மிகவும் கவரப்பட்டு, இதில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
“இப்புதிய தொடரில் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கும். ஒவ்வொரு பகுதியும் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகரும்,” என்றார் ராதிகா.
இத்தொடரின் இயக்குநர் சுந்தர் கே.விஜயன் கூறுகையில், “இது மற்றொரு சித்தியின் கதை. ராதிகா மற்றும் இதர கலைஞர்களின் பங்களிப்பால் இதுவும் நேயர்களின் மனம் கவரும்,” என்கிறார்.