அஷோக் தியாகராஜன் இயக்கத்தில் அபி சரவணன், வெண்பா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மாயநதி'.
மேலும் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் அஷோக் தியாகராஜன்தான் எழுதி உள்ளார். இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்துள்ளார்.
"மகள் மீது பாசமும் மிகுந்த நம்பிக்கையும் கொண்டுள்ளார் நாயகியின் தந்தை. நாயகிக்கோ மருத்துவராக வேண்டும், சமுதாயத்துக்கு முடிந்தவரை சேவையாற்ற வேண்டும் என்பதே லட்சியம்.
"மறுபக்கம் எந்தவிதமான இலக்கும் இன்றி சுற்றிக்கொண்டிருக்கிறான் நாயகன். காதலிப்பது ஒன்றையே தனது குறிக்கோள் என்றும் பின்னர் முடிவு செய்கிறான்.
"லட்சியத்துடன் வாழும் இளம்பெண்ணையும் இந்தச் சராசரி இளைஞனையும் மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளேன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பே 'மாயநதி'," என்கிறார் இயக்குநர் அஷோக் தியாகராஜன்.
பதின்ம வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக்கவர்ச்சியைக் கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா? என்பதை யதார்த்தமாக கூறியிருப்பதாகக் குறிப்பிடுபவர், இது இளையர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் கவரும் படைப்பாக இருக்கும் என்கிறார். நாயகன் அபி சரவணனுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும் என்றும் சொல்கிறார்.

