அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஓ மை கடவுளே'.
சின்னத்திரை புகழ் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
காதலும் கற்பனையும் கலந்த படமாக இது உருவாகிறதாம். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
"நமது நாட்டில் அதிகரித்துவரும் விவாகரத்துகளுக்கு இந்தப் படம் ஒரு தீர்வு சொல்வதாக அமையும். நம் வாழ்க்கையில் நடந்து முடிந்த சில விஷயங்களை மாற்றுவதற்கு கடவுள் இரண்டாவது வாய்ப்பு கொடுத்தால் என்ன ஆகும்? என்பதை நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறோம்.
"படத்தைப் பார்க்கும் கணவன் மனைவிக்கு தாம்பத்தியம் குறித்த புரிதல் அதிகமாகும்," என்கிறார் இயக்குநர் அஷ்வத்.
விவாகரத்து, தம்பதியர் இடையேயான மோதல் போன்ற விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும், பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும் என்று உறுதி
யளிப்பவர், குடும்பத்துடன் பார்க்கும் வகையிலேயே இந்தப் படம் உருவாகிறது என்கிறார்.
"சாதாரண பிரச்சினைகளைக் கூட இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதாக்கிவிடுகிறார்கள். அதனால்தான் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினையை அலசியுள்ளோம்," என்கிறார் அஷ்வத். இப்படம் விரைவில் திரைகாண உள்ள நிலையில், விளம்பர நடவடிக்கைகள் துவங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

