'மனிதனாக இருக்க வேண்டும்'

'மனிதனாக இருக்க வேண்டும்'

2 mins read
aa90ea84-d668-4d94-861f-d19a658ba68c
சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு 12ஆம் தேதி துவங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  -

சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு 12ஆம் தேதி துவங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதன்முறையாக இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் தாம் நடிப்பதாகவும், தமக்கு ஏராளமான முஸ்லிம் நண்பர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சிம்பு.

தன்னைப் பற்றி வெளிவரும் விமர்சனங்கள் குறித்துக் கவலைப்படுவதே இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், முதலில் நல்ல மனிதனாக இருக்கவேண்டும் என்பதற்கு மட்டுமே தாம் முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"நான் தந்தை பெரியாரின் பாடலைப் பாடுகிறேன், சபரிமலைக்கும் செல்கிறேன். இந்துவான நான் முஸ்லிம் கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன்.

"இவற்றையெல்லாம் பார்த்து சிலருக்குக் குழப்பம் ஏற்படுகிறது. பலர் என்னிடமும் இதுகுறித்துக் கேட்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எல்லோரையும் போல் சராசரியாக இருக்க முடியாது. ஏதேனும் வித்தியாசமாக இருக்க வேணேடும் என்று ஆசைப்படுவதைவிட முதலில் மனிதனாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

"பெரியாரிடம் எனக்குச் சில விஷயங்கள் பிடிக்கும். அதனால் அதுகுறித்து வெளிப்படையாகப் பேசுகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கையும் உண்டு. அதனால்தான் சபரிமலைக்கும் செல்கிறேன்," என்கிறார் சிம்பு.

பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது அது தொடர்பாகக் குரல் கொடுக்க முஸ்லிமாக நடிக்கத் தயார் என்று குறிப்பிடுபவர், 'மாநாடு' படத்தில் அத்தகையதொரு வாய்ப்பு தமக்கு வாய்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறார் சிம்பு. இது இசையமைப்பாளர் யுவனின் பெயர் என்பது உபரித் தகவல்.

"யுவன் சங்கர் ராஜா எனது நெருக்கமான நண்பர். அவரது பெயரிலான கதாபாத்திரத்தில் நடிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஒருதரப்பினர் இஸ்லாமியர்களை மையப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

"அதில் எனக்கு அறவே உடன்பாடில்லை. அவ்வாறு செய்வது எனக்குப் பிடிக்கவும் இல்லை. என்னுடைய நண்பர்களில் முக்கால் வாசி பேர் இஸ்லாமியர்கள்," என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்துக்கான படப்பிடிப்பு வரும் 12ஆம் தேதி முதல் இடைவெளி இல்லாமல் ஒரு மாதத்துக்கு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. சிம்புவுக்கு ஏற்ற அதிரடிக் காட்சிகள், 'பஞ்ச்' வசனங்களை வெங்கட்பிரபு தயார் செய்திருக்கிறாராம்.

இது வெற்றிப் படமாக அமையும் என வெங்கட் பிரபு தரப்பு நம்பிக்கையுடன் சொல்கிறது.