குழந்தை நட்சத்திரமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பேபி கீர்த்திகா, பின்னர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகி மனம் கவர்ந்தார்.
தற்போது அந்தச் சின்னப் பெண் கதாநாயகி வெண்பாவாக அவதாரம் எடுத்துள்ளார். (சினிமாவுக்காக பெயரை வெண்பா என்று மாற்றிக்கொண்டாராம்.)
“நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். ‘கஜினி’, ‘சிவகாசி’, ‘கற்றது தமிழ்’, ‘ஜாம்பவான்’ உள்ளிட்ட படங்களில் மக்கள் மனதில் பதியும் வகையில் நடித்துள்ளேன். ‘கற்றது தமிழ்’ படத்தில் அஞ்சலி மேடத்தின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தது பரவலாகப் பாராட்டைப் பெற்றுத் தந்தது. அதில் நான் பேசும் ‘நெசமாத்தான் சொல்றியா?’ எனும் வசனம் அப்போது ரொம்பப் பிரபலம். பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன்,” என்கிறார் வெண்பா.
இடையில் சில காலம் தொலைக்காட்சியிலும் தோன்றாமல் இடைவெளி விட்டாராம். சரியாக அந்த நேரம் பார்த்து சினிமா வாய்ப்பும் தேடி வந்துள்ளது.
அதையடுத்து ‘பள்ளிப் பருவத்திலே’, ‘காதல் கசக்குதய்யா’, ‘மாயநதி’ என்று கோடம்பாக்கம் இவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் ஜி.வி. பிரகாசுடன் இணைந்து நடித்துள்ளார் வெண்பா. முதலில் நிறைய சேட்டைகள் செய்யும் இளம்பெண் வேடத்தில் நடிக்கவே ஒப்பந்த மானாராம்.
சிறிய கதாபாத்திரம் என்றாலும் ஜி.வி.பிரகாஷ் படம் என்பதால் இவர் ஒப்புக்கொள்ள, திடீரென வேறொருவருக்கு அந்த வாய்ப்பைத் தந்துவிட்டாராம் இயக்குநர்.
கிடைத்த வாய்ப்பு போய்விட்டதே என்று புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென படத்தின் இரண்டாவது நாயகி நீங்கள்தான் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
“இதில் இயல்பான தோற்றத்துடனும் சில காட்சிகளில் பேய்த் தோற்றத்துடனும் நடித்துள்ளேன். பேயாக நடிப்பது சுலபம் என்று நினைத்தது தவறாகிவிட்டது. அதற்கு சற்றே மெனக்கெட வேண்டி இருந்தது. பேய்ப்படம் என்றால் நன்றாகக் கத்தவேண்டும் என்பது இப்படத்தின் மூலம் நான் கற்ற பாடம்.
“ஜி.வி. பிரகாஷ் பெரிய நடிகர், இசையமைப்பாளர் என்கிற பந்தா இல்லாதவர். அதேபோல் இயக்குநர் எழில் போன்ற அனுபவம் வாய்ந்த இயக்குநர்களின் படத்தில் நடிப்பது நமக்கு இரட்டிப்பு லாபம் தரும்.
“உழைப்புக்கு ரிய சம்பளம் ஒரு பக்கம் இருக்க அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்,” என்று சொல்லும் வெண்பா காதல், டேட்டிங், விருந்து நிகழ்வுகள் பற்றி எ ல்லாம் பேசுவதற்குத் தயாரில்லை என்று ஒரே போடாகப் போடுகிறார்.
இதுவரை காதல் அனுபவம் என்று எதுவும் இல்லையாம். பள்ளியில் படித்தபோது மூவர் இவரைக் காதலிப்பதாகக் கூறினராம். ஆனால், வெண்பா யாரையும் கண்டுகொள்ளவில்லை.
“தற்போது திரைப்படங்களில் நடிப்பது தான் எனது ஒரே வேலை. அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் முழு கவனத்தையும் செலவிட்டு வருகிறேன்.
“இதுவரை யாரைப் பார்த்தும் எனக்குக் காதல் வந்ததில்லை. எனவே, இன்றுவரை நான் முரட்டு சிங்கிள்தான். காதல் அனுபவம் ஏதேனும் இருந்தால் நிச்சயம் வெளிப்படையாகச் சொல்வேன்,” என்று சொல்லிச் சிரிக்கிறார் வெண்பா.