'விஜய் மாதிரிதான் ஆதியும்'

3 mins read
26aea5ae-db7e-471f-b174-e8f35678e92e
தவறுகளைச் சுட்டிக்காட்டும் போதுதான் அடுத்தமுறை இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். எல்லோரும் ஒரேமாதிரி பேசத் தொடங்கிவிட்டால் போரடித்துவிடும் என்கிறார் நாயகன் ஆதி. படம்: ஊடகம் -

'நான் சிரித்தால்' படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளது. அப்படத்தைத் தயாரித்த நிறுவனமே இதை அறிவித்துள்ளதால் நிச்சயம் லாபம் கிடைத்திருக்கும் என நம்பலாம்.

கடந்த 14ஆம் தேதி இப்படம் வெளியானது. இதில் நாயகன் ஆதி ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்க, கே.எஸ். ரவிகுமார், படவா கோபி, முனீஸ்காந்த், ரவிமரியா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருந்தனர்.

ஆதி படங்கள் என்றாலே, இளையர்களைக் கவரும் வகையில் நிறைய அம்சங்கள் இருக்கும். இந்தப் படத்திலும் அவை இடம்பெற்றுள்ளன. ராணா இயக்கத்தில் அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி, குஷ்பு தம்பதியர் தயாரித்துள்ள படம் இது.

இந்நிலையில் சென்னையில் இப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அனைவரும் 'ஹிப் ஹாப்' ஆதியை வெகுவாகப் பாராட்டினர். கே.எஸ். ரவிகுமார் பேசுகையில், நடிகர் விஜய்யிடம் காணப்படும் குணாதிசயங்கள் ஆதியிடமும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

"ஒரு விஷயத்தில், காரியத்தில் இறங்கும்போது நமக்கு எது பலம், எது பலவீனம் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அதன்பிறகே களமிறங்க வேண்டும். அந்த வகையில் ஆதி தன்னுடைய பலங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து வைத்துள்ளார். அதனால்தான் அவரால் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுக்க முடிகிறது.

"என்னைப் பொறுத்தவரை விஜய்க்கும் ஆதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. நான் சொல்லும் ஒற்றுமை நடிப்பில் அல்ல. விஜய்யின் நடிப்பு தனி ரகம். ஆனால் நேரில் பார்க்கும்போது விஜய் எப்படி வெட்கப்படுவாரோ, பணிவாக இருப்பாரோ அதேபோன்று ஆதியும் எப்போதும் வெட்கப்பட்டு பணிவுடனும் சிரிப்புடனும் காணப்படுவார்," என்றார் கே.எஸ். ரவிகுமார்.

ஆதியின் மேடை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆதியின் திறமையைக் கண்டு அசந்து போனதாகத் தெரிவித்தார்.

"ஆதியிடம் உள்ள ஆற்றலும் சக்தியும் பிரமிக்க வைக்கிறது. அரங்கில் உள்ள அத்தனை பார்வையாளர்களையும் ஆடவைக்க இவர் ஒருவரே போதும். மேடை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், தனது திரைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களை ஆடவைத்துக் கொண்டிருக்கிறார் ஆதி," எனப் பாராட்டினார் கே.எஸ்.ரவிகுமார்.

இதையடுத்துப் பேசிய தயாரிப்பாளர் குஷ்பு, மூன்றாவது முறையாக 'ஹிப் ஹாப்' ஆதியின் படத்தை தங்களது அவ்னி மூவிஸ் தயாரித்திருப்பதாகக் குறிப்பிட்டார். 'நான் சிரித்தால்' படம் சிலருக்குப் பிடித்திருக்கிறது எனில், சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

"ஜனநாயகத்தின் அழகே இப்படி மாறுபட்ட கருத்துகள் வருவது சகஜம்தான். விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி. ஏனென்றால் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போதுதான் அடுத்தமுறை இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். எல்லோரும் ஒரேமாதிரி பேசத் தொடங்கிவிட்டால் போரடித்துவிடும்.

"கொஞ்சம் எதிர்மறை கருத்துக்களும் தேவை. கொஞ்சம் விமர்சனமும் இருக்கவேண்டும். ஊழலும் இருக்க வேண்டும், பிரச்சினைகளும் இருக்கவேண்டும். அப்போதுதான் சுவாரசியமாக இருக்கும்," என்றார் குஷ்பு.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போதுதான் தாம் சினிமா மேடையில் ஏறுவதாகக் குறிப்பிட்ட அவர், சினிமாவைத் தவிர தனக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது என்றார்.

"ஆதியைப் பொறுத்தவரை மிகுந்த திறமைசாலி. எனது இளைய மகள்தான் ஆதிக்கு முதல் விசிறியானார்.

"ஒரே ஒரு பாடலுக்காக இசையமைக்க வந்தவர் இப்போது எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டார்.

"தூக்கத்தில் எழுந்து பார்த்தால்கூட சுந்தர் சி. ஆதியிடம்தான் பேசிக்கொண்டிருப்பார். அதனால் ஆதியை என்னுடைய சக்களத்தி என்றே குறிப்பிடலாம்," என்றார் குஷ்பு.