நெசவாளர்கள் குறித்து பேசும் திரைப்படம்

நெசவாளர்கள் குறித்து பேசும் திரைப்படம்

2 mins read
fbdd006c-63a8-432c-bf92-d9c7ae0d014e
சங்கத்தலைவன் படத்தில் சமுத்திரக்கனியுடன் ரம்யா. -

மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா, கருணாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'சங்கத் தலைவன்'. வெற்றிமாறனும் உதயாவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் வெற்றிமாறன். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், 'சங்கத் தலைவன்' நண்பர்களின் கூட்டணியால் உருவான படைப்பு என்றார்.

"நண்பர்களின் கூட்டணி என்று நான் சொன்னது நூறு விழுக்காடு உண்மை. நானும் இயக்குநர் மணிமாறனும் பள்ளிக்காலத்தில் இருந்தே நண்பர்கள். அதேபோல் கருணாஸும் உதயாவும் சிறுவயது நண்பர்கள்.

"நண்பர் செல்வம் மகன் ராபர்ட்டின் இசை பிடித்திருந்ததால் மட்டுமே இசையமைக்க சம்மதம் தெரிவித்தோம். வெறும் நட்பு காரணமாக மட்டுமே ஒருவருக்கு வாய்ப்புத் தந்துவிட முடியாது," என்றார் வெற்றிமாறன்.

"அண்மைக் காலமாகத் திரைப்படங்களை தயாரிப்பதைவிட அவற்றை வெளியிடுவது மிகச் சிரமமான விஷயமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், பட வெளியீட்டை சற்றே நிதானமாகத் திட்டமிட்டு செய்ய வேண்டியதும் அவசியமாக உள்ளது," என்றார்.

"குறைந்த செலவில் ஒரு கதையைச் சொல்ல வேண்டுமானால், முதலில் சமுத்திரகனியைத்தான் கூப்பிட வேண்டி உள்ளது. இந்தக் கதையைக் கேட்டவுடன் நடிப்பதாக சொன்னார். அவர் இந்தப் படத்துக்குள் வந்தபிறகு இயல்பாகவே நல்ல விளம்பரம் கிடைத்துவிட்டது. அதனால் ரசிகர்கள் இப்படம் குறித்துப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

"பாரதிநாதனின் நாவலை வைத்தே இப்படத்தை உருவாக்கி உள்ளோம். அந்த நாவல்தான் இப்படத்தின் மூலதனம். முழு நாவலையும் படத்துக்குள் அடக்க முடியுமா என்று கேட்டால் கொஞ்சம் சிரமம்தான். அந்நாவலின் சிறு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு படமாக்கி உள்ளனர்," என்றார் வெற்றிமாறன்.

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜவுளித்துறையில் நிகழும் அவலங்கள், கைத்தறி நெசவுத்துறை சார்ந்த மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்த வருகிறது 'சங்கத் தலைவன்'. இதில் நெசவாளர் சங்கத் தலைவனாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.

பாரதிநாதன் எழுதிய 'தறி' என்ற நாவலே இத்திரைப்படத்தின் மையம். இது சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு.

'ஓகே கண்மணி', 'மாசு என்கிற மாசிலாமணி', 'வனமகன்' ஆகிய படங்களில் நடித்துள்ள சின்னத்திரை தொகுப்பாளினியான ரம்யா, 'சங்கத் தலைவ'னில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ரம்யா பளு தூக்குவதில் ஆர்வமுள்ளவர், அத்துறையில் பதக்கங்கள் பெற்று சாதித்து வருகிறார். 'சங்கத் தலைவன்' படத்தின் கதையம்சம் பிடிக்கவே, கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். கருணாஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் விரைவில் வெளியீடு காண உள்ளதாகத் தகவல்.