பெரிய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் சிறு வாய்ப்புகளையேனும் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டால்தான் திரையுலகில் நிலைத்து நிற்கமுடியும்.
இந்தச் சூட்சமம் தெரிந்ததால்தான் நடிகைகள் ராதா, ரோஜா போன்றவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நாயகியாக நடிக்க முடிந்தது. நடிகை அஞ்சலி இதைப் புரிந்துகொண்டார் போலும்.
அதனால் பெரிய பட்ஜெட் படங்களிலும், முன்னணி நாயகர்களுடனும்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பதில்லை.
பிரம்மாண்ட படமோ, குறைந்த செலவிலான படமோ நீங்கள்தான் கதாநாயகி என்றால் உடனே கால்ஷீட் கொடுத்து விடுகிறார். அந்த வகையில் அஞ்சலி நடிக்கும் புதுப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா.
அவருக்கு 59 வயதாகிறது எனில் அஞ்சலிக்கு வயது 33. போயப்பட்டி ஸ்ரீனு இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகிறது.
இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கக் கேட்டு அனுஷ்காவைதான் படக்குழு முதலில் அணுகியுள்ளது. அவர் முடியாது என்று உதட்டைப் பிதுக்கவே நயன்தாராவைத் தேடிச் சென்றுள்ளனர். அவர் தற்போது வாங்கும் சம்பளத்தை விட 1 கோடி அதிகமாக கொடுத்தால் கால்ஷீட் தருவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
கையெடுத்துக் கும்பிடாத குறையாக தேடி வந்தவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டாராம். இதையடுத்து யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது இயக்குநருக்கு அஞ்சலி நினைவு வந்திருக்கிறது.
பிறகென்ன? தொலைபேசியில் விவரத்தைச் சொல்லிக் கதை கேட்கிறீர்களா? என்று கேட்டால், மறுநாளே ஹைதராபாத்துக்கு வந்துவிட்டாராம். தற்போது சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட அனைத்தையும் பேசி முடித்து படப்பிடிப்புக்குத் தயாராகி வருகின்றனர்.
அஞ்சலி நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘நாடோடிகள்-2’. விமர்சன ரீதியில் பாராட்டுகளைப் பெற்றாலும் படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அஞ்சலியை விமர்சகர்கள் பாராட்டியிருந்தனர். எனினும் கோடம்பாக்கத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் இன்னும் தேடி வரவில்லையாம்.
இதனால் வருத்தத்தில் இருந்தவருக்கு பாலகிருஷ்ணாவின் படம் ஆறுதல் அளித்துள்ளது. அதனால்தான் வயதான நாயகன் என்றெல்லாம் பார்க்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
ரஜினிக்கு 70 வயதாகிறது. அவருடன் நாயகிகள் ஜோடி சேரவில்லையா என்று அஞ்சலிக்கு ஆதரவாக அவரது தரப்பு கேள்வி எழுப்புகிறது.
அண்மைக் காலமாக காதல், திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளை தவிர்க்கிறார் அஞ்சலி.
குறிப்பாக தனக்கும் நடிகர் ஜெய்க்கும் இடையேயான நட்பு குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என தம்மைப் பேட்டி காண வருபவரிடம் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறாராம்.
“தமிழில் நிறைய நல்ல படங்கள் வருகின்றன. அவற்றில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக ஒவ்வொருவரையும் அழைத்து வாய்ப்பு கேட்க முடியாது.
“என் திறமைக்குரிய கதாபாத்திரங்கள் தேடி வரும் என நம்புகிறேன். அதுவரை காத்திருப்பேன்,” என்கிறார் தெலுங்கு தேசம் பக்கம் ஒதுங்கியிருக்கும் நடிகை அஞ்சலி.