கல்லூரியில் படிக்கும்போது தன் மனதில் உருவான கதைக்கருவை தற்போது திரைப்படமாக உருவாக்குகிறார் எம்.டி. ஆனந்த்.
போதைப் பழக்கத்தால் இன்றைய இளையர்கள் எப்படி சீரழிகிறார்கள் என்பதை விவரிக்கும் படமாக இவர் இயக்கும் ‘மரிஜுவானா’ உருவாகி வருகிறது.
போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பலரை தாம் நேரில் பார்த்திருப்பதாகவும், அந்தப் பழக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நன்கு அறிந்திருப்பதாகவும் சொல்கிறார் ஆனந்த். இப்படத்தின் நாயகனாக ரிஷி ரித்விக்கும், நாயகியாக ஆஷாவும் நடித்துள்ளனர்.
‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் அஜித்குமார் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெறுமனே நகைச்சுவை மட்டுமே செய்யாமல் கதையோடு பயணிக்கும் குணச்சித்திர கதாபாத்திரமாக நடித்துள்ளார் பவர்ஸ்டார்.
கார்த்திக் குரு இசை யமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.
இந்நிலையில் போதைப் பழக்கம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு இப்படத்தை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் ஆனந்த்.
“இந்தப் படத்தின் கதைக்கரு நான் கல்லூரியில் படிக்கும்போது உருவானது. கஞ்சா என்ற போதை வஸ்துவால் இளைஞர்கள் எப்படி சீரழிகிறார்கள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்.
“தடை செய்யப்பட்ட பொருள் எப்படிக் கிடைக்கிறது? கஞ்சாவின் சாதக, பாதகங்கள் என்னென்ன என்று முறையாக ஆய்வு மேற்கொண்டுதான் இந்தப் படத்தின் கதையை எழுதி முடித்தேன். படம் பார்க்கும்போது எல்லாமே நிஜத்தை வெளிப்படுத்தும்விதமாக இருக்கும்.
“செயின் ஸ்மோக்கர் என்று சொல்வது போல் கஞ்சா போதைக்கு அடிமையானவர்களிலும் அப்படிச் சிலர் இருக்கிறார்கள். போதை மருந்து கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எந்த அளவுக்கும் போவார்கள் என்பதைத்தான் இதில் சொல்லியுள்ளேன்.
“தன்னிலை மறந்த மெய்நிலைதான் கஞ்சா அடித்தால் கிடைக்கும் அனுபவம். அளவுக்கு அதிகமான கஞ்சா பயன்பாடு ஆபத்தை விளைவிக்கும் என்பதை இதில் சொல்லி இருக்கிறேன். அளவாக எடுக்கும்போது ஆபத்து குறைவு. அது எப்படி என்றால் மருத்துவ ரீதியாக எடுக்கலாம்.
“ஒரிஜினல் கஞ்சா என்பது மருந்து. கீரை மாதிரி, கசாயம் மாதிரி பயன்படுத்தலாம். சில நாடுகளில் பீட்சாவில் பயன்படுத்துகிறார்கள். கனடா, ஜமைக்கா போன்ற நாடுகளில் சட்டபூர்வமாக அனுமதி கொடுத்துள்ளார்கள். ஆனால் இந்தியாவில் அதற்கு அனுமதி இல்லை. ஏனெனில் கஞ்சா இந்தியாவில் தடை செய்யப்பட்ட வஸ்து.
“ஒரு பேருந்து ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவருக்கு பாதிப்பு இல்லை. ஆனால் அதில் பயணம் செய்யும் பயணிகளுக்குத்தான் ஆபத்து அதிகம். அதுபோன்று கஞ்சா பயன்படுத்துபவர்களால் மக்களும் சமூகமும் எவ்வித பாதிப்பு அடைகிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறேன்.” என்கிறார் ஆனந்த்.