'பிக்பாஸ்' புகழ் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டி இடையேயான காதல் முறிவதற்குத் தாம் காரணமல்ல என நடிகை ஷெரின் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக எழக்கூடிய கேள்விகளுக்கு தாம் இனிமேல் பதில் சொல்லப் போவதில்லை என அவர் கறாராகக் கூறியுள்ளார்.
தர்ஷன், சனம் ஷெட்டி இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில் 'பிக்பாஸ்' போட்டியில் பங்கேற்றார் தர்ஷன். எனினும் போட்டி முடிந்த பிறகு சனம் ஷெட்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்தார்.
இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் அவர் நடிகை ஷெரினுடன் நெருக்கமாகப் பழகியதே காதல் முறிவுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. சனம் ஷெட்டியும்கூட சில பேட்டிகளில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார் ஷெரின். எனினும் சமூக வலைத்தளங்களில் சிலர் அவரை விமர்சித்தும் ஏசியும் பதிவிடவே, தற்போது தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
தன்னைப் பற்றி எவ்வளவு மோசமாக விமர்சித்தாலும் அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் தனது குடும்பத்தை இழுக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
"கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. என்னைத் தாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அதைத் தாராளமாகச் செய்யட்டும். அதுகுறித்து நன்கு அறிந்துதான் இதில் நான் ஈடுபட்டேன்.
"என்னை நீங்கள் எவ்வளவு மோசமான பெயர்கள் கொண்டும் அழைக்கலாம். எனினும், போலியான கணக்குகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, தாக்கும் அருவெறுப்பான கிண்டல்களுக்கு நான் பதில் சொல்லவேண்டி இருக்கும் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை," என்று ஷெரின் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களின் தவறுகளுக்காக தம்மைக் குற்றம்சாட்டுவது, தம்மையே குற்றவாளி போல் உணர வைக்காது என்று குறிப்பிட்டுள்ள அவர், யாரைக் குற்றம் சாட்டுவது என ஒழுங்காகத் தெரிந்துகொண்டு செயல்படுவது தான் நல்லது என அறிவுறுத்தி உள்ளார்.
அவ்வாறு செய்யாமல் போனால் ஒருவர் குறுகிய மனப்பான்மையும், குறுகிய பார்வையும் கொண்டவராக மாற நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
"நான் அமைதியாக இருப்பதை எனது பலவீனமாகக் கருதவேண்டாம். இந்த விவகாரத்தில் இனிமேல் நான் எந்தவிதக் கருத்தும் கூற விரும்பவில்லை. என்னை ஏசுவது சிலருக்கு அமைதியைக் கொடுக்கும் என்றால் அவர்கள் அதைச் செய்யட்டும்.
"இந்த விவகாரம் தொடர்பாக இதுதான் என்னுடைய அதிகாரப்பூர்வ தகவல். இனிமேல் இதுகுறித்து நான் எதுவும் பேசமாட்டேன்," என்று ஷெரின் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் ஷெரின்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்குப் புது வாய்ப்புகள் ஏதும் தேடி வந்ததாகத் தெரியவில்லை.

