நன்றாக நடித்தும் சில வெற்றிப்படங்களில் பங்களிப்பு செய்தும் தங்களுக்குரிய வாய்ப்புகள் சரிவர கிடைப்பதில்லை என சில கதாநாயகிகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பிறர் செய்யும் தவறுகளால் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ரெஜினா கசான்ட்ரா தமிழில் நடித்த ஒன்றிரண்டு படங்கள் தோல்வி கண்டன.
எனினும் இவர் நடிப்பில் சோடை போகவில்லை. விமர்சன ரீதியில் ரெஜினாவின் நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்தது.
எனினும் வாய்ப்புகள் அமையாததால், தெலுங்குப் பக்கம் ஒதுங்கினார். அங்கு ஒன்றிரண்டு படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து, ஹைதராபாத்திலேயே நிம்மதியாக முகாமிட்டிருந்தார்.
இந்நிலையில் 'சூர்ப்பனகை' படம் மூலம் அவரை மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வந்துள்ளனர். கார்த்திக் ராஜு இயக்கும் இந்தப் படத்தில் ரெஜினாவின் கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்ல, முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதற்கிடையே அருண்விஜய்யுடன் புதுப்படம் ஒன்றில் இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
"திறமை இருந்தும் வாய்ப்பின்றித் தவித்த நிலையில், மீண்டும் தமிழில் கவனிக்கப்படும் நாயகியாக உருவெடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இந்த இரு படங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். கார்த்திக் ராஜு சார் மிக நேர்த்தியாக படத்தை உருவாக்கி வருகிறார். "அருண் விஜய் இன்று தமிழ்த்திரையுலகின் முக்கியமான நாயகன் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் இணைந்து நடிப்பது உண்மையாகவே பெரிய வாய்ப்பு," என்று உற்சாகத்துடன் பேசுகிறார் ரெஜினா.
இவரைப் போலவே நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் மற்றொரு நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது 'பொன் மாணிக்கவேல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மார்ச் மாதத் துவக்கத்திலேயே இப்படம் வெளியாகும் என பெரிதும் நம்பியிருந்தாராம். ஆனால் திடீரென படத்தின் வெளியீட்டைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். இதனால் நிவேதா பெரிதும் ஏமாற்றத்துக்குள்ளாகி இருக்கிறார். "படம் உரிய நேரத்தில் வெளியாகி வெற்றி பெறும்போது எங்களுக்குரிய புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆனால் இப்போது அத்தகைய வாய்ப்புகளை இழந்து நிற்கிறோம்," என நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.

