நடிகைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் மிக மோசமாகப் பதிவிடுவது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகை ரகுல் பிரீத் சிங்.
பெண்களை இந்தச் சமூகம் வெறும் போதைப்பொருளாகப் பார்க்கிறது என்றும், இத்தகைய நிலை மாறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்ச் சினிமாவில் தற்போது வாய்ப்புகள் குறைந்துள்ள போதிலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார் ரகுல் பிரீத் சிங்.
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சிப் படங்களை வெளியிடுவது, ரசிகர்களுடன் உரையாடுவது, இவரது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இவரைப்பற்றி சிலர் மோசமாக விமர்சிக்கிறார்களாம்.
சிலர் ஆபாசமாக ஏசி கருத்துகளைப் பதிவிடுகிறார்களாம். இதுகுறித்து தற்போது மனந்திறந்து பேசியுள்ளார் ரகுல்.
"நடிகைகளை சிலர் கேவலமாகப் பார்க்கிறார்கள். சினிமாவில் நடிப்பவர்கள்தானே... நம்மை என்ன செய்துவிட முடியும் என்றும் நினைக்கிறார்கள்.
அதனால்தான் இப்படிப்பட்டவர்களால் சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் கருத்துகளைப் பதிவிட முடிகிறது," என்று குறிப்பிட்டுள்ள ரகுல், இத்தகைய செயல்பாடுகள் மனதளவில் தம்மை மிகவும் பாதித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் சிலர் எல்லை மீறிப் போவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இத்தகைய போக்கைக் கண்டு தமக்கு அவ்வப்போது கோபம் வருவதாகவும், அதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"பெண்களை நம் சமூகம் போதைப் பொருளாகப் பார்க்கிறது. இந்நிலை மாறவேண்டும். அண்மையில் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் நான் அணிந்திருக்கும் ஆடை குறித்து எல்லை மீறி ஆபாசமாகப் பதிவிட்டார். இதனால் எனக்குக் கோபம் வந்தது. அவரைக் கடுமையாக திட்டி பதிவிட்டேன்.
"போலிக் கணக்குகள் பின்னால் ஒளிந்து
கொண்டு உண்மையான முகத்தை வெளிக்காட்ட துணிச்சல் இல்லாத கோழைகள் பலர் உள்ளனர். இப்படிப்பட்டவர்கள்தான் சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளைப் பதிவிடுகின்றனர்," என்று ரகுல் பிரீத்சிங் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் போலிக் கணக்குகளைத் தொடங்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும், அப்போதுதான் ஆபாசப் பதிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதை அவரது தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை. வாய்ப்பு இல்லை என்றாலும் சம்பளத்தை குறைக்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகச் சொல்கிறாராம் ரகுல் பிரீத் சிங்.

