மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும், பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது முக்கியம் என்றும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமரின் இந்தப் பதிவைக் குறிப்பிட்டு நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ஏழாண்டுகளுக்குப் பிறகு நிர்பயா வழக்கில் நீதி வழங்கப்பட்டுள்ளது என்று உண்மையாகவே நீங்கள் (பிரதமர்) நினைக்கிறீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"குற்றம் நடந்து குறைந்தது 6 மாதங்களில் மரணதண்டனை என்பதை நாம் வலியுறுத்தும் நேரம் இது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? இந்தக் குற்றங்களால் பெண்கள் உயிரிழப்பது சரியென்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு நாம் தாமதமாக நீதி வழங்கி இருக்கிறோம்," என்று வரலட்சுமி தமது பதிவில் மேலும் சில கேள்விகளை அடுக்கியுள்ளார்.
இந்நிலையில் பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே சம்பந்தப்பட்டவரை தூக்கிலிட வேண்டும் என்று நடிகை நமீதா வலியுறுத்தி உள்ளார். நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது தமக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைப் போல் நாட்டில் இன்னொரு சம்பவம் நிகழ்ந்துவிடக்கூடாது என்றும் அரசாங்கம் இது தொடர்பாக சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்றும் நமீதா தெரிவித்துள்ளார்.
"குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி தருகிறது. எனினும் இந்த நீதி கிடைக்க ஏழாண்டுகள் ஆகிவிட்டன. எதற்காக நமது நாட்டில் இதற்கு இவ்வளவு தாமதம் ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனே தண்டனை வழங்கவேண்டும். பாலியல் குற்றவாளிகள் என உறுதியான பிறகு மறுநாளே தூக்கிலிட வேண்டும்," என நமீதா மேலும் வலியுறுத்தி உள்ளார்.
தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு கூறுகையில், மோசமான குற்றங்களுக்கு தற்போது இருப்பதை விட மேலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு தீர்ப்புகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
" 'இது நீண்ட காத்திருப்பு' தான். ஆனால் நீதி கிடைத்து விட்டது. நிர்பயா வழக்கின் தீர்ப்பானது நீதித்துறை மீதான நம்பிக்கையைக் காப்பாற்றி உள்ளது. துவண்டுவிடாமல் தொடர்ந்து போராடிய நிர்பயா பெற்றோருக்கும் வழக்கறிஞர்களுக்கும் என் வணக்கங்கள். நீதித்துறையையும் வணங்குகிறேன்," என மகேஷ்பாபு மேலும் தெரிவித்துள்ளார்.

