சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது தெரிந்த ஒரே சொல் 'கொரோனா'. மூன்று மாதத்திற்கு முன்னால் 'கொரோனா' கிருமி உலக மக்கள் அனைவரிடமும் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்த கிருமியால் திரை உலகமும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அதனால் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களின் ரசிகர்களின் மீது அக்கறை வைத்துள்ளனர். தங்களின் விருப்ப நடிகர் கூறும் ஒவ்வொரு சொல்லையும் கருத்தில்கொண்டு செயல்படும் ரசிகர்கள் பலர் உள்ளனர்.
அவர்களைக் கருத்தில்கொண்டு கொரோனாவின் தீவிரம் குறித்தும் ஆபத்து குறித்தும் பொதுமக்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் காணொளிகளை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
தனுஷ்: "மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ அலுவலர்களுக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். அவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அசட்டுத் தைரியத்துடன் வெளியே சுற்றாமல் வீட்டிலேயே இருப்பதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு," என்று கூறியுள்ளார்.
திரிஷா: 'யுனிசெஃப்' நிறுவனத்தின் இந்தியாவுக்கான நல்லெண்ணத் தூதராக இருக்கிறார் திரிஷா. அதனால் அவர் தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டு இருக்கிறார். பொதுமக்கள் தங்கள் கைகளைக் கழுவுவது, பொது இடங்களில் இருமல், தும்மல் வந்தால் செய்ய வேண்டியவை பற்றி காணொளியை உருவாக்கி இருக்கின்றனர்.
சாந்தனு: கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டால் என்னென்ன அறிகுறி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அந்த அறிகுறி இருந்தால் மட்டும் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். அனைவரும் மருத்துவமனையை முற்றுகையிட்டால் உண்மையில் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன்: விலகி இருத்தல் அவசியம். வீட்டில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள். மனதுக்குப் பிடித்தமானவர்களுடன் தொலைபேசியில் தினமும் பேசுங்கள். ஆனால் நேரில் வாருங்கள் என்று கூப்பிட்டால் தயவுசெய்து செல்லவேண்டாம். அவர்களால் நமக்கும் நம்மால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரித்விகா: 5 ரூபாய் முகக்கவசத்தை 50 ரூபாய்க்கு தன்னிடம் விற்க முயன்றனர் என்று தன்னுடைய அனுபவத்தைக் கூறியிருக்கிறார். அத்துடன் "பணம் சம்பாதிக்க இது நேரம் இல்லை. முகக்கவசத்தை சலுகை விலையில் தரவேண்டும். முடிந்தால் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகத் தரவேண்டும்," என்று கூறியுள்ளார்.
பாரதிராஜா: "பல போராட்டங்களில் வென்றவர்கள் நாம். உடல் எதிர்ப்பு சக்தியால் கொரோனா கிருமியை அழித்து விரட்டுவோம். சுகாதாரம் ஒன்றே தற்போதைய மருந்து," என்று கூறியுள்ளார்.
நடிகர் ரகுமான்: "தயவுசெய்து பொய்யான தகவல்களையும் பொய்யான செய்திகளையும் நம்பாதீர்கள். பாதுகாப்பாக இருங்கள், பயமில்லாமல் இருங்கள், இந்தக் கிருமித்தொற்றை எதிர்ப்போம். நம்மால் முடியும்," என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்று திரும்பி வந்த நடிகர் பிரபாஸ் தன்னால் மற்றவர்கள் பாதிக்கக்கூடாது என்று தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

