கொரோனா கிருமித்தொற்று கோடம்பாக்கத்தையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் திரைத்துறை தொழிலாளர்களின் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களும் அவர்தம் குடும்பத்தாரும் தத்தளித்து வருகின்றனர்.
இதையடுத்து சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர், தொழிலாளர்களின் நலனுக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
கொரோனா பீதி காரணமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து திரையுலகத்தினரும் படப்பிடிப்புகளை ஒத்திவைத்துள்ளனர்.
சினிமா சார்ந்த இதர பணிகளும்கூட ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் முடங்கியுள்ளது.
“இதனால் நடிகர்கள் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர்களைப் பொறுத்தவரை ஒன்றிரண்டு படங்களின் படப்பிடிப்பு தள்ளிப் போவதைத் தவிர, வேறு பெரிதாக இழப்பில்லை.
“சில படங்களின் வெளியீடு தாமதமாவதும் புதுப்பட வேலைகளைத் தொடங்குவது தள்ளிப்போவதும் தவிர்க்க முடியாத விஷயங்கள். தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை, பட வெளியீடு தாமதமாவதால் தயாரிப்புச் செலவுக்காக பெற்ற கடன் தொகைக்கு ஒன்றிரண்டு மாதங்கள் வட்டி செலுத்தும் சுமை மட்டுமே இருக்கும்,” என்கிறார்கள் திரையுலக விவரப் புள்ளிகள்.
இந்நிலையில், தொழிலாளர்களின் நிலைதான் பரிதாபத்துக்கு உரியது.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி கூறுகையில், “தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமும் படித்தொகையும் வழங்கப்படுகிறது. இரண்டுமே படப்பிடிப்பு நடந்தால்தான் கிடைக்கும்.
“ஆனால், இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை படப்பிடிப்பு நடக்கவில்லை என்றால் தொழிலாளர்கள் பாடு திண்டாட்டமாகிவிடும். எனவே அனைவரும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து, முன்னணி நடிகர்கள் உட்பட பலரும் தொழிலாளர்களுக்குப் பல்வேறு வகையில் உதவி வருகின்றனர். நடிகர்களில் முதல் ஆளாக சிவகுமார் தமது இரு வாரிசுகளான சூர்யா, கார்த்தியுடன் இணைந்து பத்து லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தன் பங்காக பத்து லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். நடிகர் பார்த்திபன் 250 மூட்டை அரிசி வழங்கி உள்ளார். ஒவ்வொன்றும் 25 கிலோ எடை கொண்டதாகும்.
இதேபோல் நடிகரும் இயக்குநருமான மனோபாலாவும் 10 மூட்டை அரிசி வழங்கியுள்ளார்.
திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிலாளர்கள் நலமாக இருந்தால்தான் திரைத்துறை வளமாக இருக்கும் என்கிறார் ஆர்.கே. செல்வமணி.
“திரைப்படப் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதால் 15,000 தொழிலாளர்கள் தவிக்கின்றனர். ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால், அவர்கள் கஞ்சி, சோறாவது உண்டு உயிர்வாழ இயலும்.
“பத்தாயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால் அதற்கே இரண்டு கோடி தேவைப்படும். சுமாரான அரிசிகூட ஒரு மூட்டை ரூ.1,250 ஆகிறது.
“உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வரும் தொழிலாளர் குடும்பங்களுக்கு உணவு, நிதி அளிப்பீர் என கேட்டுக்கொள்கிறோம்,” என்று ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இன்று காலையில் லைட்மேன் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கைபேசி வழி தொடர்பு கொண்டு, ‘சார் வேலைநிறுத்தம் எப்பொழுது முடியும்‘ என்று கேட்டார். 15 முதல் 20 நாட்கள் வரை ஆகலாம் என்றேன்.
“அதற்கு, ‘சார் நான் வேலைக்குப் போய் செத்தால்கூட பரவாயில்லை. உணவு இல்லாமல் என் குழந்தைகள் பசியால் சாவதைவிட நான் கொரோனா கிருமியால் செத்தாலும் பரவாயில்லை’ என்று வேதனையுடன் கூறினார்.
“அவரது உணர்வுகளை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை,” என்று ஆர்.கே.செல்வமணி மேலும் கூறியுள்ளார்.