திரைத்துறையில் பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருவதாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை யாரேனும் புகார் எழுப்பவதும் அதையொட்டி சில சர்ச்சைகள் வெடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
பட வாய்ப்புக்காக தங்களைப் படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று முன்னணி நடிகைகளே புகார் கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.
இந்நிலையில், திரையுலகில் பாலியல் சீண்டல்கள் இருப்பது உண்மைதான் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.
அவர், மாதவனுடன் இணைந்து நடித்துள்ள ‘நிசப்தம்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அனுஷ்காவிடம் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது தாம் எதையும் வெளிப்படையாகப் பேசுவதுதான் வழக்கம் என்று அனுஷ்கா குறிப்பிட்டார்.
“படவாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் திரைத்துறையில் நடக்கவே இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல இயலாது.
“ஆனால் எனக்கு அதுபோன்ற அனுபவம் எதுவும் ஏற்படவில்லை. ஆகவே, நான் எப்போதும் வெளிப்படையாகவே இருந்திருக்கிறேன்.
“வாய்ப்பு பெறுவதற்காக நடிகைகளிடம் இருந்து இதுபோன்ற ஆதாயங்களை சினிமா பிரமுகர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனில் அது மிகவும் தவறு. இத்தகைய போக்கைத் தவிர்க்க வேண்டும்,” என்றார் அனுஷ்கா.
இதற்கிடையே ‘நிசப்தம்’ படக்குழுவினர் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அனுஷ்காவும் கலந்துகொண்டார். அப்போது இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா குறித்து குறிப்பிட்டபோது அவர் துக்கத்தை மறைக்க இயலாமல் கண்ணீர்விட்டு அழுதார்.
“கோடி ராமகிருஷ்ணாவின் இழப்பை இந்தத் தருணத்தில் நான் அதிகமாக உணர்கிறேன். அவர் இன்னும் சில நாட்கள் நம்மிடையே இருந்திருக்கலாம்,” என்று குறிப்பிட்டபோது, அனுஷ்காவின் கண்களில் கண்ணீர் திரண்டது.
அனுஷ்கா தெலுங்கில் நடித்த முதல் படம் ‘சூப்பர்’. இதன் இயக்குநர் பூரி ஜெகநாத். ஆனால் அவருக்கு அதிக புகழையும் தனி அடையாளத்தையும் பெற்றுத் தந்த படம் ‘அருந்ததி’. இதன் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா. அவர் கடந்தாண்டு காலமானார். நிகழ்ச்சியில் பேசியபோது அதை அனுஷ்கா நினைவுகூர்ந்தார்.
அண்மையில் தாம் ஒருவரை காதலித்ததாகவும் சூழ்நிலை காரணமாக அவரைப் பிரிய நேர்ந்ததாகவும் கூறியிருந்தார் அனுஷ்கா. இதையடுத்து யார் அந்த காதலர் என ரசிகர்கள் தங்களுக்குள் விவாதித்து வருகிறார்கள்.
எனினும் தாம் காதலித்தவரைப் பற்றிய விவரங்களை வெளியிட விரும்பவில்லை என அனுஷ்கா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்நிலையில், அவரது குடும்பத்தார் தகுந்த வரனை தொடர்ந்து தேடி வருவதாகத் தெரிகிறது. விரைவில் அனுஷ்கா வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்க வாய்ப்புண்டாம்.