அறிமுக நாயகர்களுடன் நடிப்பதால் திரையுலகில் தனது மதிப்பு எந்தவிதத்திலும் குறைந்துவிடாது என்கிறார் ‘கயல்’ ஆனந்தி.
‘என் ஆளோட செருப்ப காணோம்’ படத்தில் நடித்த பிறகு, சினிமாவைப் பற்றிய ஒரு புதிய புரிதல் ஏற்பட்டுள்ளதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு முன்பு வரை பெரிய நாயகர்களுடன் மட்டுமே நடிக்கவேண்டும் என ஆசைப்பட்டாராம். ஆனால் கதைதான் ஒரு படத்தின் முதன்மை நாயகன் என்ற உண்மையை இந்தப் படம்தான் புரியவைத்ததாம்.
அதன்பிறகு தமக்கும் கதைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கத் துவங்கியதாக சொல்கிறார்.
தற்போது ஆனந்தி நடித்து முடித்துள்ள ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ படமும் இவரது புதிய கொள்கைக்கு ஏற்பவே அமைந்துள்ளது.
“சின்ன பட்ஜெட் படம், அறிமுக நாயகன், இயக்குநர் உள்ளிட்ட சில காரணங்களால் படத்தில் நடிக்க முதலில் யோசித்தேன்.
“ஆனால் இயக்குநர் ஹைதராபாத் வரை என்னைத் தேடி வந்து கதை சொன்னார். அந்தச் சந்திப்பு நிகழும் வரையில் ஏதேனும் காரணம் சொல்லி தவிர்த்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.
“ஆனால், கதையைக் கேட்ட பிறகு என் மனம் மாறியது,” என்கிறார் ஆனந்தி.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் என்பதுடன் ஒரு பெண்ணின் பார்வையில்தான் படம் நகருமாம். பெண்களுக்கு இந்தச் சமுதாயம் எந்த வகையில் ஆறுதலும் ஆதரவும் கொடுக்கத் தவறுகிறது என்பதை படத்தில் அலசியுள்ளதாகத் தகவல்.
“இன்றளவும் சில கிராமங்களில் நல்ல கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பையன்களை மட்டும் தனியார் பள்ளிக்கும் பெண்களை அரசுப் பள்ளிக்கும் அனுப்பும் வழக்கம் உள்ளது.
“பெண்களுக்கு கிடைக்காத ஆதரவைப் பற்றி இந்தப் படம் பேசும். அதனால் பெண்களுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்,” என்கிறார் ஆனந்தி.
இதில் அழகம்பெருமாள் இவரது தந்தையாக நடித்துள்ளார். இமான் அண்ணாச்சி பேராசிரியர் கதாபாத்திரத்திலும் பள்ளித் தோழியாக ஸ்ரீஜாவும் நடித்துள்ளனர்.
தற்போது ஆனந்தி நடிப்பில் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படமும் தயாராகி உள்ளது. வெளிநாடுகளில்தான் முக்கிய காட்சிகளை எடுத்துள்ளனராம்.
‘மூடர்கூடம்’ நவீன் இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளார் ஆனந்தி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் தம்மை வேறு மாதிரி வெளிப்படுத்த உதவும் என்கிறார்.
“முழுக்க கற்பனைக்கதை என்பதால் சுவாரசியமாக இருக்கும். 50 நாட்கள் படப்பிடிப்பு நடந்தபோது ஒட்டுமொத்த படக்குழுவும் ஒரே குடும்பம்போல் இருந்தோம்.
“நவீன் சார் இயக்குநராக மட்டும் இல்லாமல், படப்பிடிப்புத் தளத்தில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தார். அவர் மிகுந்த திறமைசாலி.
“ஒட்டுமொத்த குழுவிலும் நான் மட்டும்தான் பெண். அதனால் எதற்காகவும் ஏசாமல் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டனர். படவெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார் ஆனந்தி.
இவர் எம்பிஏ பட்டப் படிப்பை முடித்தவர். திரைப்படங்களில் நடித்தாலும் படிப்பை மட்டும் பாதியில் கைவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம். அடுத்து முனைவர் பட்டம் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள இருக்கிறார். தோழிகள் பலர் எதற்காக இவ்வளவு படிக்கிறாய் என்று கேட்கிறார்களாம்.
“நான் நன்றாகப் படிப்பதால் தொடர்ந்து படிக்கவேண்டும் என என் கல்லூரி முதல்வர் சொல்லியிருக்கிறார். அவரது வார்த்தைகளுக்கு நான் எப்போதும் நிச்சயம் மதிப்பளிப்பேன்,” என்கிறார் ஆனந்தி.