பிரபலமான நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா நேற்று காலமானார். அவருக்கு வயது 83.
கடும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவரது உடல்நிலை நேற்றுமுன்தினம் மோசமானது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிர் நீத்தார்.
நடிகையாக மிளிர்வதற்கு முன்பே நாட்டுப்புற பாடல்கள் மூலம் தமிழகத்தில் பரவலாக அறியப்பட்டவர் முனியம்மா. 40 ஆண்டுகளாக தமிழகம் மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலும் கச்சேரிகள் நடத்தி உள்ளார். அவருக்கு தமிழக அரசு 'கலைமாமணி பட்டம்' வழங்கி கௌரவித்தது.
விக்ரம் நடித்த 'தூள்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான பரவை முனியம்மாவுக்கு ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது.
அதன் பிறகு மளமளவென 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்தார். சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' அவர் கடைசியாக நடித்த படம்.
பரவை முனியம்மாவுக்கு 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். மகன்களில் ஒருவர் மூளை வளர்ச்சி குறைந்தவர். தாம் இறந்து போகும் கடைசி நிமிடம் வரை இவரை நினைத்துதான் வெகுவாக கவலைப்பட்டாராம் பரவை முனியம்மா.
சில ஆண்டுகளுக்கு முன்பே வறுமை இவரை விரட்டத் துவங்கியது. அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவருடைய நிலையை அறிந்து அரசு சார்பில் 6 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார்.
அதன் பின்னர் நடிகர்கள் விஷால், சிவகார்த்திகேயன், அபி சரவணன் உள்ளிட்டோரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டினர்.
அதிலும் நடிகர் அபி சரவணன் முனியம்மாவின் கடைசி நாட்களில் அவருக்குப் பல வகையில் உதவியதாகத் தகவல். முனியம்மா காலமாகிவிட்டதாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை வதந்திகள் பரவின.

