கோடம்பாக்கத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பதாகவும் தமிழில் தனது திறமையை நிரூபித்த பிறகே மலையாளத் திரையுலகம் தம்மை அங்கீகரித்தது என்றும் சொல்கிறார் இளம் நாயகி மகிமா நம்பியார். எனவே, எப்போதுமே தமிழுக்குதான் முன்னுரிமை என்கிறார்.
“சாட்டை’யில் அறிமுகமான இவருக்கு ‘குற்றம் 23’இல் நடித்து முடிக்கும் வரை எந்த மலையாளப் பட வாய்ப்பும் தேடிவரவில்லையாம். ‘குற்றம் 23’ வெற்றி பெற்ற பிறகுதான் மம்முட்டியுடன் ‘மாஸ்டர் பீஸ்’ என்ற மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.
“தமிழ்த் திரையுலகம் எனக்கு ஆதரவளித்து வளர்த்து ஆளாக்கியுள்ளது. மலையாளப் படங்களில் தொடர்ந்து நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் என்னை முதன்முதலில் அங்கீகரித்து திறமைக்கேற்ப வாய்ப்புகளை அளித்துவரும் தமிழ்த் திரையுலகத்துக்குத்தான் அனைத்து வகையிலும் முக்கியத்துவம் தருவேன்,” என்று சொல்லும் மகிமா தற்போது கிருஷ்ணாவுடன் ‘பெல்பாட்டம்’ படத்தில் நடித்து வருகிறார்.
இது கன்னடத்தில் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் மறுபதிப்பு. 1980களில் நடக்கும் காதல் கதையாம். அதனால் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த உடைகள், ஒப்பனை, சிகை அலங்காரத்துடன் திரையில் காட்சி தருவாராம்.
“இதுவரை நான் நடித்த படங்களில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் இது. முதன்முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன்.
“கன்னடத்தில் வெளியான ‘பெல்பாட்டம்’ படத்தைப் பார்க்கக் கூடாது என இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். படத்தைப் பார்த்தால் அதில் நடித்தவர்களின் பாதிப்பு வந்துவிடும் என்பது அவரது எண்ணம். அதற்கு மதிப்பளித்து நானும் படம் பார்க்கவில்லை.”
அண்மையில் மகிமா நடிப்பில் வெளியான ‘அசுரகுரு’ படத்தில் அவர் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ‘மகாமுனி ‘ படத்தில் மது அருந்துவது போன்ற காட்சியிலும் நடித்திருந்தார். இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்புகிறார்களாம்.
“சினிமாவுக்காக அப்படி நடித்தேன். நிஜத்தில் நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. ஒரு நடிகை தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க வேண்டும். அது ஒரு நடிகையின் கடமை.
“ஆனால் நிஜத்தில் நான் மது, சிகரெட் பக்கமே போனதில்லை. அவற்றைப் பார்த்தால் கொரோனா கிருமியைப் பார்ப்பது போல் ஓரடி தள்ளித்தான் நிற்பேன்,” என்று சொல்லும் மகிமா, ஆண்கள் செய்யும் அனைத்தையும் செய்யும் உரிமை பெண்களுக்கும் உண்டு என்கிறார்.
அந்த வகையில் புகைபிடிப்பதும் மது அருந்துவதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை, விருப்பம் என்பது மகிமாவின் வாதம்.
“பெண்கள் மது அருந்தக்கூடாது, புகைபிடிக்கக் கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை.
“அதேசமயம் இந்தப் பழக்கங்களால் பிறருக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்றுதான் சட்டம் சொல்கிறது. அதில் கவனமாக இருந்தால் போதும். இந்தக் கெட்ட பழக்கங்கள் ஒரு தனி நபரை மட்டுமல்லாமல், அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்,” என்று பொறுப்புடன் பேசுகிறார் மகிமா.
அண்மைக்காலமாக வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளியாகி வரும் நிலையில் மகிமாவுக்கும் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஆசையாம்.
குறிப்பாக ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறாராம்.
“எங்கள் வீட்டிலும் ஒரு பி.டி.உஷா இருந்தார். அவர் என் அம்மா வித்யா.
“மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்தார். நான் பிறந்த பிறகும்கூட ஓட்டப் பந்தய வீராங்கனையாக இருந்த அவருக்கு நிறைய சாதிக்கவேண்டும் எனும் லட்சியம் இருந்தது.
“ஆனால் குடும்பம் வாரிசு என்று வந்தபிறகு தனது ஆசையைக் கைவிட்டார்.
“அம்மாவின் கனவை சினிமாவிலாவது நிறைவேற்ற வேண்டும் என விரும்புகிறேன்,” என்கிறார் மகிமா.