கொரோனா கிருமித் தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கிய பிறகு இரண்டு முறை உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டாராம் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதனால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பேருந்துப் பயணத்தின்போது கூட்டத்துக்குள் சிக்கும் பெண்கள் தினந்தோறும் பல்வேறு கொடுமைகளை அனுபவிப்பதாக அவர் கூறியுள்ளார். கல்லூரியில் படித்த காலத்தில் இவருக்கும் இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்துள்ளதாம்.
"அப்போது நான் செல்லும் பேருந்தில் நிறைய கூட்டம் இருக்கும். ஒவ்வொரு நாளும் போருக்குச் செல்வது போல் தோன்றும். யாரேனும் சில்மிஷம் செய்வார்களோ என்று பயந்து நடுங்குவேன்.
"டெல்லியில் சீரழிக்கப்பட்ட நிர்பயாவைப் போல் நானும் கூட்டமாக உள்ள அரசுப் பேருந்தைத் தவிர்க்க தனியார் பேருந்தில் பயணம் செய்திருக்கிறேன். ஊரடங்கின்போது நிர்பயா வழக்கு தொடர்பான இணையத் தொடர் ஒன்றை பார்த்தபோது பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தன," என்கிறார் ஷ்ரத்தா.

