ஆயிரக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் முன்னணி நடிகர்கள் இதுவரை நிதி ஏதும் அறிவிக்கவில்லை என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுப்புகள் எழத் துவங்கியுள்ளன.
குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டோர் அதிக தொகையை அளிக்க முன்வர வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி உள்ளனர்.
முணுமுணுப்புகள் அதிகமானதையடுத்து நடிகர் அஜித் தொழிலாளர்களுக்கு என 25 லட்சமும், பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிகளுக்கு தலா 50 லட்சம் என மொத்தமாக 1.25 கோடி ரூபாய் அளித்துள்ளார். விஜய் தரப்பிலிருந்து இன்னும் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
தென் இந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கே சில கோடிகள் தேவைப்படுகின்றன.
கொரோனா கிருமித் தொற்று பாதிப்பால் திரையுலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தபட்சம் 2 அல்லது 3 மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. எனவே, ஊரடங்கு உத்தரவு மேலும் கடுமையாகும் முன்பு தொழிலாளர்களிடம் உரிய பொருட்களையும் உதவித் தொகையையும் சேர்த்துவிட வேண்டும் என தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் விரும்புகின்றனர்.
அஜித்தின் தந்தை உடல்நலமின்றி உள்ளாராம். தந்தையின் உடல்நலத்தில் கவனம் செலுத்தியதால்தான் தொழிலாளர்களுக்கான உதவித் தொகையை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக அரசு மூலமாகவோ மத்திய அரசுடன் இணைந்தோ தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவ விஜய் விரும்பவில்லையாம்.
மாறாக, தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக அவர் பெரிய அளவில் உதவி செய்ய முடிவெடுத்திருப்பதாக திரையுலக மூத்த செய்தியாளர்கள் ஆர்.எஸ். அந்தணன், பிஸ்மி ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.
'சர்கார்' பட வெளியீட்டின்போது ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக விஜய் அதிருப்தி அடைந்துள்ளார். அதேபோல் வருமான வரித்துறை சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளும்் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
"இதனால்தான் மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட விஜய் விரும்பவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விஜய் தனது ரசிகர்கள் மூலம் சத்தமின்றி பல உதவிகளைச் செய்துள்ளார்.
அதே வழியைப் பின்பற்றி இப்போதும் அவர் உதவி செய்யக்கூடும். இதற்காக அவர் பெருந்தொகை ஒன்றை ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது," என்று ஆர்.எஸ்.அந்தணன் கூறியுள்ளார்.
இதற்கிடையே ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய நால்வரும் மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும்.
எனவே, இவர்கள் தங்களால் முடிந்த உதவியை தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக்கும் செய்யவேண்டும் என மூத்த நடிகை குட்டி பத்மினி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட காணொளி பதிவு ஒன்றில் நடிகர் சங்கம் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சங்க அறக்கட்டளைக்கு ஐசரி கணேஷ் ரூ. 10 லட்சம், கார்த்திக் 2 லட்சம், நடிகர் சூரி 1 லட்சம் வழங்கி உள்ளனர்.
இதுவரை சுமார் 16 லட்சம் வசூல் ஆகியுள்ள நிலையில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் அதிகளவில் நன்கொடை அளிக்க வேண்டும் என குட்டி பத்மினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே நடிகர் விஜய் தரப்பிலிருந்து இன்று அல்லது நாளைக்குள் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நடிகர்கள் ரஜினி, கமல் ரசிகர்களும் கூட களத்தில் இறங்கி தன்னார்வலர்களுடன் இணைந்து மக்களுக்கு உதவுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

