கேரளாவில் இருந்து இறக்குமதியாகி உள்ள அனித்ராவின் முதல் படம் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்'. தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் நல்ல தமிழில் அழகாகப் பேசுகிறார்.
கேரளாவில் உள்ள கொல்லம்தான் இவரது சொந்த ஊர். தந்தை ராஜீவ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாம். அம்மா சந்திரமதி இல்லத்தரசி. ஒரே தங்கை அஞ்சலிதான் தனக்கு நெருக்கமான தோழி என்கிறார். அனித்ரா ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தவர்.
"பெண்கள் என்றாலே கண்ணாடி முன் நின்று தங்கள் அழகை ரசிப்பவர்கள் என்று சிறு வயதிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். அடிக்கடி என் முகத்தை கண்ணாடி முன் நின்று ரசிப்பேன். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில்தான் ஏன் நாமும் சினிமாவில் நடிக்கக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது," என்கிறார் அனித்ரா.
இவர் சினிமா ஆசையில் மூழ்கிக் கிடக்க, குடும்பத்தாரோ அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என விரும்பியுள்ளனர். எனினும் இவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியபோது வீட்டில் யாரும் அதற்கு முட்டுக்கட்டை போடவில்லையாம். மாறாக உற்சாகப்படுத்தி உள்ளனர்.
"மலையாளத்தில்தான் முதலில் அறிமுகமானேன். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. தமிழில் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' தான் என் முதல் படம். நன்றாகத் தமிழ் பேசுவதாகப் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
"கேரளாவில் இருப்பவர்களுக்கு தமிழ் நன்கு பரிச்சயமான மொழிதான். எங்கள் ஊரில் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் பார்க்கும் ரசிகர்கள்தான் அதிகம். ஆரம்பத்தில் தமிழில் பேசும்போது அதன் அர்த்தம் புரியாமல் பதில் அளிக்க சிரமமாக இருக்கும். ஆனால் போகப்போக தமிழ் பழகிவிட்டது."
நீங்கள் அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல நாயகிகள் இடம்பெற்றுள்ளனர். இதனால் உங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடாதா என்று கேட்டால், மாறிவரும் திரையுலகில் இதெல்லாம் சகஜமாகிவிட்டது என்பதே அனித்ராவின் பதிலாக உள்ளது.
"இது அப்படிப்பட்ட கதை. தமிழில் நடிக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. எனது திறமையைப் பார்த்து வாய்ப்பளித்துள்ளனர். எனக்கானது எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்பதை விவரிக்க இயலாது. எனினும் துணிச்சலான வேடம் என்று சொல்லலாம்.
"எனக்கு மற்றவர்களைவிட முக்கியத்துவம் இருப்பதாக நம்புகிறேன். இதில் என்னுடன் சேர்ந்து மொத்தம் 5 நாயகிகள் உள்ளனர். ஆனால் நான் படம் முழுவதும் வருகிறேன். அதேசமயம் இப்படத்தில் உள்ள சிறு கதாபாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவம் உள்ளது," என்கிறார் அனித்ரா.
ரேவதி, ஊர்வசி, ஷோபனா ஆகியோர் இவருக்குப் பிடித்தமான நாயகிகள். மூவருமே இயல்பாகவும் யதார்த்தமாகவும் நடிப்பவர்கள் எனப் பாராட்டுகிறார். அனித்ராவுக்கு ஓரளவு பரதநாட்டியம் தெரியும் என்பதால் ஷோபனாவை கூடுதலாகப் பிடிக்குமாம். கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில் ஆர்வமில்லை என்று சொல்பவர் குடும்பக் கதைகளில் நடிப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாகச் சொல்கிறார்.
"ரசிகர்கள் என்னை திரையில் எப்படி பார்க்க வேண்டும் என எனக்குள் கற்பனை செய்து வைத்திருக்கிறேன். அப்படித்தான் நடிப்பேன்.
"குடும்பப் பாங்கான நடிகையாக ரசிகர்கள் என்னைத் திரையில் கண்டு ரசிக்க வேண்டும் என்ற கொள்கையை விடாமல் கடைப்பிடிப்பேன்," என்று சொல்லும் அனித்ரா, மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவைக்கு தீவிர ரசிகையாம். படப்பிடிப்பின்போது முதன்முறையாக அவரை நேரில் சந்தித்ததை மறக்க இயலாது என்கிறார்.
"படப்பிடிப்பின்போது அவர் சூழ்நிலைக்கு ஏற்ப சில கூடுதல் வசனங்களைப் பேசி சிரிக்க வைப்பார். அவருடன் முதல் படத்திலேயே இணைந்து நடித்தது மகிழ்ச்சி தருகிறது," என்று சொல்லும் அனித்ரா தாம் மிகவும் மென்மையான பெண் என்றும் ஜாலியாக இருக்க விரும்பும் பெண் என்றும் கூறுகிறார்.
"அதேசமயம் அதிகம் பேசி அரட்டை அடிக்க மாட்டாராம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாராம்.
"தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கமாட்டேன். இதுவரை காதல் அனுபவம் ஏதுமில்லை. பள்ளியில் படித்தபோது எனக்கும் சம வயதுள்ளவர்கள் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிரண்டு பேர் எனக்கு காதல் கடிதமும் கொடுத்துள்ளனர். ஆனால் அது காதல் அல்ல," என்று சொல்பவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆர்வம் இல்லையாம்.
மாறாக கைவினைப் பொருட்கள் செய்வது உள்ளிட்ட கலைத்துவமான, கவித்துவமான விஷயங்களில் கவனம் செலுத்துவதாகச் சொல்கிறார் அனித்ரா.

