கொரோனா கிருமித் தொற்று இனம், மதம், சாதி என அனைத்தையும் கடந்து மக்களை இணைத்துள்ளது. சக மனிதருக்கு உதவவேண்டும் எனும் எண்ணம் வலுத்து வருகிறது.
அந்த வகையில் திரைக்கலைஞர்கள் பலரும் தங்களால் இயன்ற அளவு சக கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் உதவி வருகின்றனர்.
ஹன்சிகாவைத் தொடர்ந்து நடிகை ரகுல் பிரீத்சிங்கும் யூடியூப் சேனல் துவங்கியுள்ளார். இதன் மூலம் கணிசமான அளவில் நிதி திரட்டி ஆதரவற்றவர்களுக்கு உதவ நினைக்கிறாராம். மேலும் பிரதமர் நிவாரண நிதிக்குக் கணிசமான தொகை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.
அண்மையில் நடிகை ஹன்சிகா யூடியூப் தளத்தில் இயங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். இதன்மூலம் தனது வாழ்க்கை பற்றி ரசிகர்கள் இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அத்தகைய ஆர்வம் இருப்பவர்கள் தனது சேனலில் உறுப்பினராகலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பொதுவாக நடிகைகள் யூடியூப் சேனல் துவங்குவதில்லை. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. படப்பிடிப்பில்லாமல் வீட்டிலேயே தங்கியிருப்பதால் தங்கள் நடிப்புப் பசிக்குத் தீனி போட யூடியூப் தளத்தை நாடியுள்ளனர் நடிகைகள்.
இதிலும் பிறரது உதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் தனித்தே இயங்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் ஹன்சிகாவைத் தொடர்ந்து ரகுல் பிரீத்சிங் புதிய சேனல் துவங்கியுள்ளார்.
தொடக்கத்தில் அவர் சில விழிப்புணர்வு தகவல்களைப் பகிர்ந்து கொள்வாராம். அதன்பின்னர் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறு காணொளிப் பதிவுகளை வெளியிடுவாராம். நகைச்சுவையாகவும் இளமை ததும்பும் வகையிலும் அந்தப் பதிவுகள் இருக்கும் எனத் தகவல். அதேபோல் நாட்டு நடப்புகள் உலகளவிலான சுவாரசியமான விஷயங்கள், கலை, திரையுலகம் சார்ந்த சங்கதிகளுடன் அவர் ரசிகர்களைச் சந்திக்க உள்ளார்.
"ஒரு நல்ல செயலுக்காக நாம் அனைவரும் இணைந்து செயலாற்றுவோம். எனது புதிய முயற்சி மூலம் கிடைக்கும் தொகையை மக்களுக்கு உதவ பயன்படுத்துவேன். எனவே, இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்," என ரகுல் பிரீத்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரைப் போல் மேலும் சில முன்னணி நடிகைகள் யூடியூப் தளத்தில் இயங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவின்போது நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார். மேலும் சில காணொளிப் பதிவுகளையும் வெளியிடுகிறார்.
அவர் உடற்பயிற்சி செய்வது குறித்தும் அதனால் விளையும் நன்மைகள் குறித்தும்தான் அதிகம் பேசுகிறார். ரசிகர்களுக்கும் அதுதான் பிடித்திருக்கிறதாம்.
"உடற்பயிற்சி செய்வதால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம். அதனால்தான் உடற்பயிற்சி செய்யுமாறு தொடர்ந்து கூறி வருகிறேன். அதிலும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதுபோல் நல்ல விஷயம் இருக்கமுடியாது.
"நான் எத்தனை வேலைகள் இருந்தாலும் உடற்பயிற்சி செய்யத் தவறுவதில்லை. எனவே, எனது ரசிகர்களும் என்னைப் பார்த்து தினமும் உடற்பயிற்சி செய்ய தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும்," என்கிறார் சாக்ஷி அகர்வால்.
நடிகர் சங்க உறுப்பினர்களுக்காக 1,250 கிலோ அரிசியை வழங்கியுள்ளார் யோகிபாபு. குறைந்த வருமானமுள்ள நடிகர்கள், நாடக நடிகர்களுக்கு, முன்னணி நடிகர்கள் தங்களால் இயன்றதைச் செய்யவேண்டும் என நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று யோகிபாபு உதவிக்கரம் நீட்டியுள்ளார். நடிகர் சூரியும் 25 கிலோ எடை கொண்ட 100 அரிசி மூட்டைகளை திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கும் 500 கிலோ அரிசியை துணை நடிகர்கள் சங்கத்திற்கும் அளித்துள்ளார்.

