புதுடெல்லி: ஊரடங்கு உத்தரவு காரணமாக சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 25ஆம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பெரும்பாலான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், சிறு கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
இதனால் நாட்டில் 70 விழுக்காடு பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போயின. ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 21 நாள் நீடித்த ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரம் பலத்த அடியைச் சந்தித்துள்ளது என்றும், சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அக்யூட் மதிப்பீடு மற்றும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏப்ரல் மாதத் துவக்கத்தில் இந்நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில் நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துத் துறை, சுற்றுலாத் துறை, கட்டுமானத் தொழில் மற்றும் சிறு தொழில்களை நம்பி இருப்போர்தான் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 2020-21ஆம் நிதியாண்டில் 1.5 முதல் 2.8 விழுக்காடு அளவில் இருக்கும் என்று உலக வங்கி அறிவித்துள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்பிறகு நடப்பு நிதியாண்டில்தான் ஆகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் பதிவாகும் என பொருளியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

