நயன்தாரா: நம்பிக்கை இல்லாத இடத்தில் வாழக்கூடாது

நயன்தாரா: நம்பிக்கை இல்லாத இடத்தில் வாழக்கூடாது

2 mins read
05ba985e-7368-4342-bc20-4c2bd34cfacf
நீண்ட நாட்களுக்குப் பிறகு முறிந்துபோன பழைய உறவுகள் குறித்து அவர் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் புது விவாதங்களையும் ஆச்சரியத்தையும் எழுப்பி உள்ளது. படம்: இணையம் -

நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது என்று கூறியுள்ளார் நயன்தாரா. காதல், கடந்த கால உறவுகள், எதிர்காலம் குறித்து அண்மைய பேட்டியில் அவர் மனம்திறந்து பேசியுள்ளார்.

நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதைவிட தனியாக வாழ்வதே மேல் என்றும் அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா. இந்த உண்மையை உணர்ந்தபடியால்தான் தமது பழைய காதல்களைக் கடந்து வந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு முறிந்துபோன பழைய உறவுகள் குறித்து அவர் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் புது விவாதங்களையும் ஆச்சரியத்தையும் எழுப்பி உள்ளது.

"எனது கடந்தகால உறவுகளில் இருந்து வெளியே வருவது கடினமான விஷயமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையில் நான் சார்ந்துள்ள சினிமா தொழில்தான் என்னை மீட்டது எனலாம். எனது தொழிலில் தீவிர கவனம் செலுத்தினேன். அனைத்தையும்விட ரசிகர்கள் எப்போதுமே என் பக்கம் இருந்தனர்.

"அதனால்தான் எனது கடந்தகால நிகழ்வுகளை, உறவுகளை மறக்க முடிந்தது. ரசிகர்களின் பக்கபலத்தால்தான் எனது சினிமா வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல முடிந்தது. இதை வாழ்நாளில் மறக்க இயலாது," என்று நயன்தாரா அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்புவை முன்பு நயன்தாரா காதலித்ததாக தகவல் பரவியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. எனினும் இருவருக்கும் இடையேயான உறவு நீடிக்கவில்லை.

பின்னர் பிரபுதேவாவுடன் இணைத்துப் பேசப்பட்டார் நயன்தாரா. அவர் மதம் மாறி பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்வார் என்றும் நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. இருவரும் 'நானும் ரவுடிதான்' படத்தில் இணைந்து பணியாற்றியபோது காதல் மலர்ந்தது. மிக விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் திடீரென தனது கடந்தகால உறவுகள் குறித்துப் பேசியுள்ளார் நயன்தாரா. தற்போது 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இது நடிகர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இதையடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதற்கு 'காத்து வாக்குல ரெண்டு காதல்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகியாக திரிஷாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் கதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட திரிஷா திடீரென இப்போது பின்வாங்கிவிட்டதாகத் தகவல்.

காரணம் கதைப்படி எதிர்மறையான வேடத்தில்தான் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனராம். எனவே படத்தொகுப்பின் போது தனக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுமோ என அவர் தயங்குவதாகத் தகவல்.

இதையடுத்து சமந்தாவை அணுகியுள்ளதாம் விக்னேஷ் சிவன் தரப்பு. சமந்தாவும் முதலில் ஒப்புக்கொண்டு இப்போது ஒதுங்கப் பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்