மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு மிகவும் குறைவானது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கைக் கடைப்பிடித்ததுதான் இதற்குக் காரணம் என அவர் காணொளிப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"அரசு சொன்னபடி நாம் ஓரளவுக்கு நடந்திருக்கிறோம் என்பதுதான் இந்தக் குறைவான தொற்று அளவு காட்டுகிறது. இதை இன்னும் குறைத்து நாம் முழுமையாக இதிலிருந்து வெளியே வர வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், அடுத்து வரும் நாட்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.
"வாய், மூக்கு இரண்டையும் மறைப்பது போன்ற முகக் கவசம் அணிய வேண்டும். கண் குறித்து கண் மருத்துவரிடம் கேட்ட போது, அதன் மூலம் பெரிய ஆபத்து இல்லை என்று சொன்னார்கள். வாய், மூக்கு இரண்டுமே கண்டிப்பாக முகக் கவசத்தால் மூடியிருக்க வேண்டும்," என விவேக் அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் அனைவருமே வீட்டை விட்டு வெளியே சென்றால், கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் இரண்டு 'சம்' ரொம்ப முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
"அதாவது, சாப்பாட்டுக்கு மிளகு ரசம், முகத்துக்கு முகக் கவசம். இரண்டு 'சம்'களும் இருந்தால் வாழ்க்கை ஆசம் (Awesome). முகக் கவசத்தை கண்டிப்பாக அணியுங்கள்," என்று தமது விழிப்புணர்வுக் காணொளியில் விவேக் மேலும் தெரிவித்துள்ளார்.

