அச்சம் என்பது நாம் பார்க்க எப்படி இருக்கிறோம் என்பதால் வருவதல்ல. அது ஒரு மனநிலை என்கிறார் நடிகை காயத்ரி.
தமிழில் தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்போது தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
கொரோனா கிருமித் தாக்கத்தால் திரையுலகத்தினர் வீட்டில் முடங்கி உள்ளனர். ஆளாளுக்கு தினமும் சமூக வலைத்தங்களில் ஏதேனும் பதிவிடுவது, காணொளி வெளியிடுவது எனப் பொழுதைப் போக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் காயத்ரியும் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் படத்துடன் தொடர்புடைய சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.
"இது ஒரு பழைய புகைப்படம் அப்போது இந்தப் படத்துக்காக போஸ் கொடுத்து நின்றபோது என் மனதில் தன்னம்பிக்கை இல்லை.
"அப்போது என் உடல்வாகு குறித்து எனக்கு அச்சம் இருந்தது. ஆனால், எனது உடல்வாகு குறித்து அச்சப்படுகிறேன் என்று சொல்வதை சிலர் வேறுமாதிரியாக எடுத்துக் கொள்கிறார்கள்.
"நான் ஏதோ பித்துப் பிடித்து பேசுவது போன்று சிலர் கருதுகிறார்கள்.
"என்னைப் பொறுத்தவரை உண்மையில் அச்சம் என்பது ஒரு மனநிலை. நாம் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறோம் என்பதால் வருவதற்குப் பெயர் அச்சம் இல்லை," என்று காயத்ரி தெரிவித்துள்ளார்.
மனநலம் என்பதுதான் தற்போது அதிகம் கவனிக்கப்படாத பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது என்று குறிப்பிடுபவர், அனைவரும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
"எனது இந்தப் பதிவை பலர் படிப்பீர்கள். கண்ணாடியில் பார்க்கும்போது உங்களிடம் எது நன்றாக இல்லை என்பது உங்களுக்குத் தெரியவரக்கூடும். ஆனால் அப்படி உணருபவர் நீங்கள் மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது நம் எல்லோருக்குமே பொதுவான நிகழ்வுகள்தான்.
"ஒவ்வொரு தழும்பும் மச்சமும் உங்களுடைய பயணத்தில் ஒரு மைல் கல். ஒவ்வொரு கதையும் தனித்துவமானது. அதுதான் உங்களை உருவாக்கி உள்ளது. அதை ஏற்றுக்கொள்ளுங்கள், நேசியுங்கள்," என்று காயத்ரி தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நாளும் தம்மைத் தாமே கொஞ்சம் நேசிக்கவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள அவர், இந்தப் பழக்கமானது நீண்டநாள் நன்மை பயக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தமது இந்த அறிவுறுத்தலை அனைவரும் நம்பவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், இதனால் விளையக்கூடிய நன்மை அனைவரையும் மகிழ்விக்கும் என்கிறார்.
"என்மீதே நான் அன்பு செலுத்தவும் என்னை ஊக்கப்படுத்துவதிலும் சிலர் முக்கிய பங்காற்றுகிறார்கள். அவர்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மனநலம் என்பது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதைச் செய்யாத பட்சத்தில் நிச்சயமாக நாம் பாதிக்கப்படுவோம்," என்று காயத்ரி தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் மனநலம் முக்கியம் என்கிறார். காஜல் அகர்வாலோ மன அமைதி முக்கியம் என்கிறார்.
வாழ்க்கையைப் பற்றி புரிந்துகொண்ட பிறகு மன அமைதியைத் தவிர முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்திருப்பதாகச் சொல்கிறார் காஜல்.
இனி எந்தமாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருப்பதையே தாம் விரும்புவதாக அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"எவ்வளவு பணமிருந்தாலும் மன அமைதி இல்லாமல் போனால் என்ன பயன்? இப்போது கொரோனா கிருமித் தொற்றால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கும் வேளையில் பணத்தைவிட மன அமைதிதான் முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்திருக்கும்.
"சிறு வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களைப் பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொண்டேன். இனி வாழ்க்கையில் எதை நோக்கிச் செல்ல வேண்டும், எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் தெளிவு ஏற்பட்டுள்ளது," என்று காஜல் அகர்வால் மேலும் தெரிவித்துள்ளார்.
நடிகைகள் பலரும் இப்படி தத்துவார்த்தமாகவும் முதிர்ச்சியுடனும் பேசத் தொடங்கி உள்ளனர். திரையுலகில் மட்டுமல்லாமல் திரையுலகத்தினர் மனதிலும் கொரோனா கிருமி விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

