ஊரடங்கு வேளையில் முன்னணி நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். அவர்களில் சிலரது அண்மைய பதிவுகளைப் பார்ப்போம்
முன்னணி நாயகர்கள் தம்மை ஒதுக்கியதால் தாம் முடங்கிவிடவில்லை என்கிறார் வித்யாபாலன்.
அவ்வாறு தாம் ஒதுக்கப்படுவதை உணர்ந்தபோது நல்ல கதைகளின் பக்கம் தன் கவனம் திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தொடக்கத்தில் எனக்கான வாய்ப்புகள் தடையின்றி கிடைத்தன. எனினும் முன்னணி நடிகர்களுடன் என்னை நடிக்க வைப்பது குறித்து யாரும் யோசிக்கவில்லை. அவர்களால் நான் ஓரங்கட்டப்படுவதாக, நிராகரிக்கப்படுவதாக உணர்ந்தேன். ஆனால் அதற்காக சிறிதும் வருத்தப்படவில்லை. இதையடுத்துதான் நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். ஏனெனில் என்னைப் பொறுத்தவரை நல்ல கதையம்சம் கொண்ட படங்கள்தான் திரையுலகின் ஆத்மா," என்கிறார் வித்யாபாலன்.
நல்ல, வித்தியாசமான கதைகளில் நடிக்கத் துவங்கிய பிறகே ரசிகர்கள் தம்மை கவனிக்கத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ள அவர், அதன்பிறகே தமக்கு நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
திரையுலகைப் பொறுத்தவரை எல்லா நடிகைகளுமே நாயகியாக நடிக்கத்தான் விரும்புவார்கள். ஆனால் ரெஜினாவுக்கு மட்டும் வில்லியாக நடிக்க வேண்டும் என்று விருப்பமாம்.
அண்மைய பேட்டியில் தமது இந்த விருப்பத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
'மங்காத்தா' படத்தில், 'எவ்வளவு நாள்தான் நான் நல்லவனாகவே நடிக்க முடியும்' என்று வசனம் பேசுவார் அஜித். அதைத்தான் ரெஜினாவும் இப்போது சொல்கிறார்.
"நேர்மறையான கதைகளில் நடித்து போரடித்து விட்டது. அதனால்தான் எதிர்மறை வேடங்களில் அதாவது வில்லியாக நடித்துப் பார்க்க விரும்புகிறேன். நிச்சயமாக இந்த மாற்றம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்.
'மாஸ்டர்' படம் குறித்து நடிகை ஆன்ட்ரியா வெளியிட்ட தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
விஜய்யுடன் இணைந்து நடித்ததை மறக்கவே இயலாது என்கிறார் ஆன்ட்ரியா.
அண்மைய பேட்டி ஒன்றில் 'வடசென்னை' படத்தில் தாம் நடித்திருக்கவே கூடாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
"அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தொடர்ந்து அதேபோன்ற வேடங்கள்தான் தேடி வருகின்றன. என் திரை வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு 'வடசென்னை'யில் குறிப்பிட்ட அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததுதான்.
"'மாஸ்டர்' படத்தில் நடித்திருப்பது இந்த வருத்தத்தை மறக்கச் செய்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு கார் துரத்தல் காட்சியில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அது மிகவும் பரபரப்பான காட்சியாக இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்," என்று ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.

