தனது திருமண வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்றும் கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நடிகை ஸ்வாதி தெரிவித்துள்ளார்.
'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்டவர் ஸ்வாதி.
தமிழில் பல படங்களில் நடித்து முடித்தவர் பின்னர் வாய்ப்புகள் குறைந்ததும் தனியார் விமான நிறுவன விமானியான விகாஸ் வாசு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
பிறகு நடிப்பில் இருந்து விலகினாலும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் அண்மையில் தமது கணவருடன் இணைந்திருக்கும் புகைப்படங்களைத் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து நீக்கிவிட்டார் ஸ்வாதி. இதனால் மணவாழ்க்கையில் அவருக்குச் சிக்கல் இருப்பதாக பேசப்பட்டது.
இதுகுறித்து ரசிகர்கள் பலவிதமாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமது கணவரது புகைப்படங்களை அகற்றவில்லை என்றும் அவை அனைத்தும் தம்மிடம் பத்திரமாக உள்ளன என்றும் ஸ்வாதி தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ஹாரிபாட்டர் படத்தின் இசையைப் பின்னணியாக சேர்த்துள்ளார்.
மேலும் ஒரு ரகசிய அறையைப் பற்றிய உரையாடலும் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் தமது கணவரின் புகைப்படங்கள் அடங்கிய தனி உறை (ஃபோல்டர்) தமது கைபேசியில் இருப்பதாகவும் அப்படங்களைத் தாம் அழித்துவிடவில்லை என்றும் ஸ்வாதி சூசகமாகத் தெரிவித்திருப்பதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே தாம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து ஸ்வாதி எதுவும் தெரிவிக்கவில்லை.

