சில வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் ஜெய் தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்ட உச்சங்களை எட்டிப் பிடிக்கவில்லை என்று விமர்சகர்கள் கூறுவதுண்டு.
எனினும் தன்னைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் சில தோல்விகளைச் சந்தித்தாலும் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு நேர்மறையாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசும் ஜெய்யை பாராட்டுபவர்களும் உண்டு.
சிறு வயது முதலே இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் தமது லட்சியமாக இருந்தது என்கிறார் ஜெய். நடிகரானது தற்செயலாக நிகழ்ந்த ஒன்று என்றும் சொல்கிறார்.
"சிறு வயதில் படிக்கும் நேரம் போக மற்ற சமயங்களில் தேவா அப்பா உடன்தான் இருப்பேன். அவர் பாடல்களுக்கு மெட்டமைப்பதைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். அப்போதுதான் இசை மீதான எனது ஆர்வம் வெகுவாக அதிகரித்தது.
"இப்போதும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஜெய்க்குள் இருந்து விரைவில் ஓர் இசைக் கலைஞன் வெளிவருவான்.
"மிக விரைவில் முன்னணி நாயகன் ஒருவரின் புதுப்படத்துக்கான முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாகும். அதில் இசையமைப்பாளர் என்று என் பெயர் இருக்கும்," என்று ஜெய் சொல்வதைக் கேட்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
தனக்குப் பிடித்தமான நடிகர் ஜெய் என்று நயன்தாரா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதைக் கண்டு மற்ற முன்னணி நாயகர்கள் பொறாமைப்பட்டனரோ இல்லையோ, ரசிகர்கள் வியப்பில் மூழ்கினர்.
"நயன்தாரா அனைத்து முன்னணி நாயகர்களுடனும் இணைந்து நடித்தவர். அனுபவசாலி மட்டுமல்ல, திறமையான நடிகையாகவும் அசத்துகிறார். இடையில் சில காலம் நடிக்காமல் திரையுலகை விட்டு விலகியிருந்தார் நயன்தாரா. அதன்பிறகு 'ராஜா ராணி' மூலம் தமது இரண்டாவது சுற்றைத் துவங்கினார்.
"அந்தப் படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்தேன். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஒருவேளை அவருக்கு என்னைப் பிடித்திருக்க இந்த சென்டிமெண்டும் ஒரு காரணமாக இருக்கலாம்," என்கிறார் ஜெய்.
'நானும் ரௌடிதான்' படத்திலும் இவர்தான் நயன்தாராவுடன் நடிப்பதாக இருந்ததாம். அதன் கதையை இவரிடம்தான் இயக்குநர் விக்னேஷ் சிவன் முதலில் சொன்னாராம். ஆனால் கால்ஷீட் பிரச்னைகளால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது என்கிறார் ஜெய். படப்பிடிப்பின்போது நயன்தாரா எந்தவித பந்தாவும் இல்லாமல் இயல்பாக இருப்பார். என்னை வெகுவாக ஊக்கப்படுத்தினார். நன்றாக நடிப்பதாகப் பாராட்டினார் என்று நயன்தாரா புராணத்தை நன்றாகப் பாடுகிறார் ஜெய்.
என்னதான் விஜய் நடித்த 'பகவதி' மூலம் திரையுலகில் அறிமுகமானாலும் ஜெய்க்குப் பிடித்த கதாநாயகன் அஜித்தானாம். 'சென்னை-600 028' படத்தைப் பார்த்த பிறகு அன்றிரவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினாராம்.
"நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று சில நிமிடங்கள் என்னை ஊக்கப்படுத்தும் விதமாக தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவ்வளவு பெரிய நடிகர் என்னை தொடர்பு கொண்டு பேசியது வியப்பாக இருந்தது.
"அன்று முதல் இப்போது வரை எப்போதெல்லாம் மனதளவில் சோர்வாக உணர்கிறேனோ உடனே அஜித் சாருடன் பேசுவேன். அவருடன் பேசினாலே தனித்தெம்பு வந்துவிடும்.
"விஜய் சாருடன் நடித்தபோது நிறைய தவறுகள் செய்தேன். என்னால் ஒவ்வொரு காட்சியையும் படமாக்குவது தாமதமாகும். இப்போது நல்ல அனுபவம் கிடைத்திருப்பதால் மீண்டும் அவருடன் நடிக்க விரும்புகிறேன். அதிலும் அவருக்கு வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறேன்," என்கிறார் ஜெய்.

