நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் டாப்சி. அகமது இயக்கும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறாராம். இது துப்பறியும் கதை என்பதால் படம் முழுவதும் திகிலாக இருக்குமாம்.
இதில் டாப்சிக்கு சில சண்டைக் காட்சிகளும் உள்ளன. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அகமது கூறிய கதையைக் கேட்டதுமே நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார்.
"இதுவரை நடித்துள்ள திரைப்படங்களை மீண்டும் ஒருமுறை பார்த்தால் போதும். நான் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறேன் என்பது தெரியும். 'ஆடுகளம்' படத்தில் நடித்தபோது எனக்கு சினிமா என்றால் என்னவென்றே தெரியாது. இப்போதாவது கொஞ்சம் நடிப்பு வருகிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
"எனவே படங்களைத் தேர்வு செய்வதில் இப்போது மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறேன். தமிழில் எனக்கான வாய்ப்புகள் குறைவு. எனினும் 'ஆடுகளம்' முதல் 'கேம் ஓவர்' வரை நான் நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்," என்கிறார் டாப்சி.
அண்மையில் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்தாராம். அப்போது அவரது படங்களில் கதாநாயகர்களைப் போலவே நாயகிக்கும் பெரிய கதாபாத்திரம் அமைக்க வேண்டும் என்றும் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தின் மூலம் தமக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாராம்.
"ஒரு படத்தில் நான் 30 நிமிடங்கள் வந்தாலும் போதும். ஆனால் அது சிறப்பான கதாபாத்திரமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட படங்களுக்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் தரத் தயார்," என்கிறார் டாப்சி.
அண்மையில் டாப்சி நடித்து வெளியான 'தப்பாட்' படம் விமர்சகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. குடும்ப வன்முறைக்கு எதிரான இந்தப் படத்தில் டாப்சி சிறப்பாக நடித்திருப்பதாகப் பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
"இந்தப் படத்தின் நாயகி குடும்ப வன்முறையை எதிர்த்து தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் நமது இந்தியப் பெண்கள் நிஜத்தில் இவ்வாறு செய்வார்களா என்று பலரும் கேட்கின்றனர்.
"என்னைப் பொறுத்தவரை தங்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பெண்கள் பதிலடி கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இதுவும் கடந்து போகும் என இருப்பது தவறு. வன்முறையைக் கண்டு ஓடி ஒளிவதில் எந்தப் பயனும் இல்லை. இங்கு யாரும் பெண்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்க முன்வர மாட்டார்கள். பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும்," என்று சொல்லும் டாப்சி, பெண்களை மையப்படுத்தும் படங்களின் எண்ணிக்கை இந்திய திரை உலகில் அதிகரித்துள்ள போதிலும் இந்திய சினிமா முற்றிலுமாக மாறிவிடவில்லை," என்கிறார்.
"என்னைப் போன்ற சில நடிகைகள் மாறியதால் சினிமாவில் எங்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. பன்னெடுங்காலமாக இருக்கும் ஆணாதிக்கம் ஒருசில ஆண்டுகளில் மாறிவிடாது. சினிமாவைக் கடந்து பொதுவெளியில் நான் பேசுவது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான்.
"கோவா திரைப்பட விழாவில் ஒரு செய்தியாளர் அங்கு கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் இந்தியில் மட்டுமே பதில் சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார். அதைக் கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் இந்தியில் மட்டுமே நடிக்கவில்லை என்பதால் எல்லோருக்கும் புரியும் மொழியில் பேச விரும்புவதாக சொன்னேன். அதனால்தான் தமிழில் பேசவா என்றும் கேட்டேன்.
"இதில் என்ன தவறு இருக்க முடியும்? அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருமா, வராதா என்றெல்லாம் நான் யோசிப்பதே இல்லை. எது சரியெனப்படுகிறதோ அதைத்தான் பேசுகிறேன். இப்படித்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து முதலில் போதிய விழிப்புணர்வு இல்லை. ஆனால் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பான காணொளிகளைப் பார்த்தபோது மனம் வெதும்பி போனேன். எனவேதான் மாணவர்களுக்கு ஆதரவாக நான் குரல் கொடுக்க நேரிட்டது," என்கிறார் டாப்சி.

