நடிகை ஜோதிகாவுக்கு ஆதரவாக தாம் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கோவில்கள் குறித்து ஜோதிகா பேசியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
கோவில் உண்டியலில் பணம் போடுவதைப்போல் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கும் அனைவரும் செலவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் ஜோதிகா. அவரது இந்தக் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாக இரு தினங்களுக்கு முனம் ஒரு தகவல் வெளியானது.
“ஜோதிகாவின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துகள். அவருக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக வந்து நிற்பேன். கோவில்கள் மருத்துமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது,” என விஜய் சேதுபதி கூறியிருப்பதாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு நெருக்கமானவர்கள் இத்தகைய கருத்து எதையும் அவர் தெரிவிக்கவில்லை என விளக்கமளித்தனர். இந்நிலையில் விஜய் சேதுபதியே இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இது பொய்யான தகவல் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே முன்னாள் இயக்குநரும் நடிகருமான ராமராஜனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் உள்ள ராமராஜன் அண்மையில் சேதுபதியை சந்தித்தாராம். அப்போது அவர் சொன்ன கதை சேதுபதிக்கு மிகவும் பிடித்துப் போனதாம்.
“இந்தப் படத்தில் ராமராஜன் நடிக்கப் போவதில்லை. படத்தை இயக்குவது மட்டுமே தன் வேலை என்று கூறிவிட்டார். சேதுபதிக்கு ஏற்ற கச்சிதமான கதைக்களத்துடன் அவர் களமிறங்குகிறார்,” என்கிறது ராமராஜன் தரப்பு.
இதுகுறித்து விஜய் சேதுபதியே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.