இந்தாண்டு தனது பிறந்தநாளுக்காக சிறப்புக் கொண்டாட்டங்கள் ஏதும் வேண்டாம் என்று நடிகர் அஜித் தமது ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
இம்முறை இத்தகைய கொண்டாட்டத்திடன் ஒரு பகுதியாக அஜித்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்த சிறப்புப் புகைப்படம் (General Display Picture) ஒன்றை வெளியிட ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக திரையுலகப் பிரபலங்கள் சிலரை அணுகி புகைப்படத்தை அவர்கள் மூலம் வெளியிட வேண்டும் என்பது அவர்களின் திட்டம். அந்த வகையில் நடிகர் ஆதவ் கண்ணதாசனும் இந்தப் படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர இருந்தார்.
இந்நிலையில் அஜித் அலுவலகத்தில் இருந்து தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது அஜித் பிறந்த நாளையொட்டி புகைப்படம் எதையும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஆதவ் தெரிவித்துள்ளார்.
"இது அஜித்தின் தனிப்பட்ட கோரிக்கை. ஒரு ரசிகனாக, சக நடிகனாக, மனிதனாக அவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க விரும்புகிறேன்.
"அவரது கோரிக்கையை சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு அனைவருக்கும் விளக்கட்டுமா என்று கேட்டபோது அனுமதி அளித்தனர்.
"எனவே கொரோனா கிருமித் தொற்று நிலவும் இந்த நேரத்தில் அனைவரும் நலமாக வாழ வாழ்த்துவோம். 'தல' அஜித்தின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்போம்," என்று ஆதவ் கண்ணதாசன் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

