எப்போதும் ஏதேனும் வேலையில் ஈடுபட்டிருப்பதுதான் தனது வழக்கம் என்றும் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது மிகவும் சலிப்பாக உணர்ந்ததாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பரதநாட்டியம் கற்பதில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
"படப்பிடிப்பில் பங்கேற்பது என்றால் எனக்கு மிகவும் விருப்பம். பல மணி நேரம் நீடித்தாலும் சோர்வையும் களைப்பையும் பொருட்படுத்தாமல் பங்கேற்பேன். ஒருவேளை படப்பிடிப்பு இல்லை என்றால் திரைப்படம் சார்ந்த மற்ற பணிகள் இருக்கும்.
"எதுவுமே இல்லை என்றால் நண்பர்களைச் சந்தித்துப் பேசுவது, திரைப்படங்கள் பார்ப்பது, அரட்டை அடிப்பது என்று பொழுதுபோகும். ஆனால், தற்போது வீட்டில் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றாகிவிட்ட நிலையில் சூழ்
நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டி உள்ளது. அந்த வகையில் நானும் வேறு வழிமுறைகளைக் கையாண்டு பயனுள்ள வகையில் பொழுதைக் கழிக்கிறேன்," என்கிறார் ஐஸ்வர்யா.
தற்போது இணையம் வழி பரதநாட்டியம் கற்று வருகிறாராம். சென்னையில் உள்ள கலாஷேத்ராவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்தான் இவருக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.
"சிறு வயது முதலே பரதநாட்டியம் கற்கவேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. சில காலம் குச்சிப்புடி நடனமும் கற்றேன். ஆனால், காலப்போக்கில் அந்தப் பயிற்சியைத் தொடர முடியவில்லை.
"என் அம்மா நல்ல பரதநாட்டியக் கலைஞர். அவரைப்போல் நடனம் கற்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு எப்போதுமே உண்டு. இந்நிலையில் திடீரென ஊரடங்கு அமலுக்கு வந்ததால் நிறைய ஓய்வு கிடைத்துள்ளது. எனவே, பரதநாட்டியம் கற்க முடிவு செய்து நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன். அப்பொழுதுதான் காளி என்ற நடன ஆசிரியர் குறித்து தகவல் கிடைத்தது. அவர் என்னைச் சிறப்பாக வழிநடத்துகிறார்," என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தற்போது தினமும் 2 மணி நேரங்களாவது பரதநாட்டியப் பயிற்சிக்கு ஒதுக்குகிறாராம். இதனால் முதுகுவலி ஏற்பட்டுள்ளதாம்.
"எனவே, சில தினங்கள் ஓய்வில் இருக்கிறேன். வலி குறைந்ததும் மீண்டும் பயிற்சியைத் தொடங்குவேன். நடனத்துடன் உடற்பயிற்சி செய்யவும் தவறுவதில்லை," என்கிறார் ஐஸ்வர்யா.
ஊரடங்கைப் பயன்படுத்தி இதுவரை பார்க்காத பல்வேறு மொழித் திரைப்படங்களை, தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து ரசிக்கிறாராம்.
"இந்த ஊரடங்கால் நமக்கு மட்டும் ஓய்வு கிடைக்கவில்லை. சுற்றுப்புறச் சூழலுக்கும் ஓய்வு கிடைத்திருக்கிறது. நம்மால் ஏற்பட்ட காயங்களில் இருந்து சுற்றுச்சூழல் குணமடைந்து வருகிறது. பறவைகளின் ஒலி கேட்டு காலையில் கண்விழிக்கிறேன். நம்மில் சிலருக்கு இதெல்லாம் புதிதாக இருக்கும். நகரத்தில் வசிப்பவர்களுக்கு மாலையில் போக்குவரத்து இரைச்சல் கேட்காததும் சுத்தமான காற்றைச் சுவாசிப்பதும் ஆனந்த அனுபவமாக இருக்கும்," என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

